Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, March 20, 2018

குறி கேட்டல் (Jiaobei fortune crescent)


நாம் நினைத்த காரியம் நடைபெறுமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள எல்லோருக்கும் கொஞ்சம் ஆர்வம் இருக்கும். இதனை தெரிந்து கொள்ள நிறைய பேர் சில நேரங்களில் குறி கேட்க செல்வதும் உண்டு. இந்த வழக்கம் சீன, தைவான் நாடுகளிலும் உண்டு.

அதற்காக நம் ஊர் போல் கள்ளச்சாமி வந்து ஆட்டம் போட்டு குறி சொல்வார்கள் என்று நினைத்தால் அது தவறு. இங்கு சாமியாட்டம் எல்லாம் கிடையாது. இங்கு குறி கேட்பது என்பது கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும்.


இங்குள்ள கோவில்களில் சிவப்பு நிறத்தில் இரண்டு கட்டைகள் படத்தில் இருப்பது போன்று வைத்திருப்பார்கள். இந்த கட்டைகள் தான் குறி கேட்க பயன்படுத்தும் ஆயுதம். முதலில் நாம் கேட்க போகும் கேள்வியை ஆம், இல்லை என்ற பதில் வரும் வடிவில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதாவது எனக்கு யானை வேண்டும், பூனை வேண்டும் என்று வேண்டிக்கொண்டு குறி கேட்க கூடாது. எனக்கு யானை கிடைக்குமா? என்று ஒரு கேள்விதான் கேட்க வேண்டும். அடுத்த கேள்வியாக எனக்கு பூனை கிடைக்குமா? என்று வேண்டும் என்றால் கேட்கலாம்.

முதலில் எனக்கு யானை வேண்டும் என்பதை நன்றாக மனதில் நிறுத்தி சாமி கும்பிட்டுவிட்டு "எனக்கு யானை கிடைக்குமா?" என்ற கேள்வியை முன்னிறுத்தி (மனதளவில் அங்கிருக்கும் சாமியிடம் கேள்வியை எழுப்ப வேண்டும்) கைகளில் வைத்திருக்கும் சிவப்பு கட்டையை அப்படியே கீழே போடவேண்டும்.

அந்த கட்டையானது ஒரு பக்கம் சப்பையாகவும் ஒரு பக்கம் மேடாகவும் பிறை வடிவில் இருக்கும். அதாவது நம் ஊர் சோழி போன்று நினைத்துக்கொள்ளுங்கள். இதற்கு சீன மொழியில் ஜியோபய் என்று பெயர்.


1. இரண்டு கட்டைகளில் ஒன்று மல்லாக்கவும் ஒன்று குப்பறவும் விழுந்தால் ஆம் என்று அர்த்தம். இதனை சீன மொழியில் ஷெஞ் ஜியாவ் (Shèngjiǎo) என்று சொல்வார்கள்.

2. இரண்டு கட்டைகளும் குப்பற விழுந்தால், இல்லை என்று அர்த்தம். அதாவது இப்படி விழுந்தால் நீங்கள் கேட்ட கேள்விக்காக தெய்வமானது வருத்தப்படுகிறது என்று அர்த்தம். இதனை சீன மொழியில் நூ-ஜியோவ் (Nùjiǎo) என்று சொல்வார்கள்.

3. இரண்டு கட்டைகளுமே மல்லாக்க விழுந்தால் இல்லை என்று அர்த்தம். மேலும் தெய்வங்கள் உங்களுடைய கேள்வியை நினைத்து சிரிக்கிறார்கள் என்று அர்த்தம். கிட்ட தட்ட இதற்கான விடை உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். இதனை சீன மொழியில் ஷியா ஜியோவ் (Xiàojiǎo) என்று சொல்வார்கள்.

4. ஒரு கட்டையோ அல்லது இரண்டு கட்டையுமோ குப்புறவோ அல்லது மல்லாக்கவோ விழாமல் நட்ட குத்தற நின்றால் நீங்கள் கேட்கும் கேள்வியானது தெய்வத்திற்கு புரியவில்லை என்று அர்த்தம். கேள்வியை வேறு வடிவில் மாற்றி மீண்டும் கேட்க வேண்டும். இதற்கு சீன மொழியில் லீ ஜியாவ் (Lìjiǎo) என்று சொல்வார்கள்.

சரி, இப்போ செயல்முறைக்கு வருவோம். கட்டைகளை கீழே மூன்று முறை போடவேண்டும். மூன்றில் இரண்டு முறை ஆம் என்று வந்துவிட்டால் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஆம் என்று பதில் வந்துவிட்டது என்று அர்த்தம். அதாவது நீங்கள் கேட்டயானை கிடைக்குமா?’ என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் வந்துவிட்டது. இரண்டு முறை இல்லை என்று வந்துவிட்டால் மீண்டும் இதே கேள்வியை வேறு வாக்கியங்கள் அமைத்து கேட்களாம். அப்படி மூன்று முறை ஒரே கோரிக்கையை வேறு வேறு வாக்கியங்கள் அமைத்து கேட்களாம். மூன்றிற்கும் இல்லை என்று வந்துவிட்டால் அந்த கோரிக்கையை கைவிட்டுவிட வேண்டும். வேறு கேள்வி இருந்தால் முயற்சி செய்யலாம்.


ஆம் என்று வந்துவிட்டால் அத்தோடு இந்த செயல்முறை முடிந்துவிடாது. பக்கத்தில் கூடையில் நீளமாக நிறைய மூங்கில் குச்சி வைத்திருப்பார்கள். ஒவ்வொரு மூங்கில் குச்சியிலும் ஒரு எண்ணை எழுதி அதில் சீன மொழியில் ஏதோ எழுதியிருப்பார்கள். அதில் கண்களை மூடிக்கொண்டு ஒரு குச்சியை எடுக்க வேண்டும். அந்த எண்ணை நன்றாக உள்வாங்கிக்கொண்டு மீண்டும் சாமியிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். அதாவது யானை கிடைக்குமா என்ற கேள்விக்கான பதில் இந்த எண்ணில் இருக்கிறதா என்று கோரிக்கை வைக்கவேண்டும். அதன் பின்னர் மூன்று முறை சிவப்பு கட்டையை போட்டு ஆம் வருகிறதா என்று கவனிக்க வேண்டும். இரண்டு முறை இல்லை என்று வந்தால் மீண்டும் வேறு ஒரு குச்சியை எடுத்து மீண்டும் அதே கேள்வியை கேட்டு சிவப்பு கட்டையை உருட்ட வேண்டும். இரண்டு முறை ஆம் என்று வந்தால் உங்களுக்கான பதில் இந்த எண்ணில் இருக்கிறது என்ற அர்த்தம்.

கோவிலின் ஒரு பக்கமாக ஒரு சில சாவடிகள் இருக்கும். நிறைய தன்னார்வ தொண்டர்கள் இருப்பார்கள். அவர்களிடம் கொண்டு போய் அந்த எண்ணை சொன்னால் அவர்கள் அதற்குறிய புத்தகத்தில் இருந்து உங்களுக்கு வேண்டியதை படித்து சொல்வார்கள். அதில் பொருள், எண்ணம், செயல் சம்பந்தமாக தனி தனி தலைப்பில் சில வாக்கியம் இருக்கும். உதாரணமாக உனக்கு யானை கிடைக்கும் ஆனால் நிறைய சிக்கல் இருக்கு. அல்லது 6 மாதத்தில் யானை கிடைக்கும். அல்லது 2 வருடம் கழித்து முயற்சி செய், இப்பொழுது வேண்டாம், அல்லது யானைய வாங்கினா அதுக்கு கோவணம் கட்ட கஷ்டப்படுவ  என்பது போன்று படித்து சொல்வார்கள்.

தைபேயில் உள்ள ஷின்டியன் கோவில் இதற்கு பெயர் பெற்றது. இந்த கோவில் பார்க்க புத்தர் கோவில் போல் இருந்தாலும் தாவோ மதத்தவர்களுடைய கோவில்.

ஒருமுறை என்னுடைய தைவான் நண்பர் ஷின்டியன் கோவிலுக்கு குறி கேட்க செல்கிறேன், வருகிறாயா என்று கூப்பிட்டான். அது என்ன என்று தெரிந்துகொள்ள பயங்கர ஆர்வம் எனக்கு. அதனால் நானும் வருகிறேன், என்று ஒட்டிக்கொண்டேன். சென்னையிலிருந்து வந்திருந்த சக ஊழியையும் சேர்ந்துகொண்டார். ஷின்டியன் கோவிலில் வைத்து எனக்கு தைவான் நண்பர் சொன்ன விளக்கம் தான் நீங்கள் மேலே படித்தது. அங்கு சென்றதும் எனக்கும், தோழிக்கும் இதனை முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆசை. தோழிக்கு அவர் நினைத்ததை ஒரு 6 மாத காலம் ஒத்திவைத்து முயற்சிக்கும் படி வந்தது.

எனக்கு என்னன்னு தானே கேக்கறீங்க.... இதுல‌ சஸ்பென்ஸ் எல்லாம் இல்லீங்க... 

புத்தர் என்னை பார்த்து நகைத்தார்.

Wednesday, December 14, 2016

காண்டா விளக்கு 3 - உமா சங்கர் IAS

அப்பொழுது நான் திருவாரூரில் ஒரு கூட்டுறவு வங்கிக்காக வேலை செய்துகொண்டிருந்தேன். தினமும் மதிய உணவுக்கு பின்னர் வங்கியின் பின்பக்கம் லோன் செக்சனில் சென்று சிறிது அரட்டை அடிக்கும் பழக்கம் இருந்தது. அப்படி ஒருநாள் லோன் செக்சனில் நின்று கொண்டிருக்கும் பொழுது அசிஸ்டண்ட் மேனஜர் ஒருவர் வந்து கலெக்டர் வந்திருக்கிறார். உதவி செய்லாலர் உங்களை கூப்பிடுகிறார், உடனே வாருங்கள் என்றார்அன்றைய தினம் பொது செயலாலர் விடுப்பில் இருந்தார். நான் செல்லும் பொழுது துனை செயலாலர் வெளியே அறைவாசலில் இருந்தார். கலெக்டர் கம்பியூட்டர் சம்பந்தமாக ஏதோ கேள்வி கேட்கிறார். எங்களுங்கு தெரியவில்லை. நீங்கள் பதில் சொல்லுங்கள் என்று என்னை அறைக்குள் கிட்ட தட்ட தள்ளிவிட்டார்.

திருவாரூர் தனி மாவட்டமாக மாறும் பொழுது அதன் முதல் கலெக்டராக திரு உமா சங்கர் IAS அவர்கள் நியமிக்கபட்டார். அவர் எதற்கு இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றேன்.

பின்னாடியே வந்த துனை செயலாலர் இவர் தான் எங்கள் வங்கியின் கணிப்பொறியாலர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். என்னை எதிர்தார்போல் அமரச்சொன்னார். உடனே அமர்ந்துகொண்டேன். இத்தனைக்கும் துனை செய்லாலர் நின்று கொண்டே இருந்தார். எனக்கு அந்த வயதில் காலாட்டும் பழக்கம் இருந்தது. சைக்கலாஜிக்கல் படி உணர்சிவசப்பட்ட நிலையில் அதனை குறைப்பதற்காக ஒரு சில பேர் காலாட்டுவார்கள் என்று பின்னர் புத்தகத்தில் படித்திருக்கிறேன். பின்னாடி இருந்து ஒருவர் முதுகில் மெதுவாக கிள்ளி, காலை ஆட்டாதே என்று செய்கை செய்தார்.

அப்பொழுதைய திமுக அரசு, மகளீர் சுய உதவிக்குளுக்களை ஊக்குவித்த நேரம். அவர்கள் மகளீருக்கான ஒரு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். தினசரி வியாபரத்திற்கு செல்பவர்கள் கந்து வட்டி காரர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம். இத்திட்டத்தின் படி ஒருவருக்கு 100 ரூபாய் கடன் கொடுத்தால் தினசரி 1ரூபாய் விதம் 130 நாட்கள் வசூலிப்பார்கள். மகளீர் வங்கிக்கு வரவேண்டிய அவசியம் கூட இல்லை. வங்கியில் இருந்தே ஒருவர் போய் வசூல் செய்துவிட்டு வருவார். அருமையான திட்டம். மகளீர் தினமும் காலையில் கந்து வட்டிகார்களிடம் போய் நிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாலையில் சம்பாத்தியத்தில் பாதியை கந்துவட்டிகாரனுக்கு கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. முதலுக்கான பணம் கடன் திட்டம் மூலம் கிடைக்கும், தினமும் சம்பாத்தியத்தில் இருந்து 1 ரூபாய் கட்டினால் போதும். அன்றைய அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறை படுத்தி உண்ணிப்பாக‌ மேற்பார்வை செய்துகொண்டிருந்தது. அதற்கு தினமும் தேவையான தகவல்களை வங்கியில் இருந்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

திருவாரூர் கலெக்டர் திரு உமாசங்கரிடம் ஒரு மென்பொருள் தயாரிக்கும் டீம் இருந்தது. அவர்கள் இந்த மகளீர் கடன் திட்டத்திற்கு ஒரு  மென் பொருள் தயாரித்திருந்தார்கள். நான் இருந்த வங்கி திருவாரூர், நாகப்பட்டணம், தஞ்சாவூர், மாயவரம், கும்பகோணம் பகுதியில் கனிணி மயமாக்களில் மிகவும் பெயர் வாங்கியது. அதனால் முதன் முதலில் நான் இருந்த வங்கியில் அதனை நிறுவி சோதித்து பார்க்கலாம் என்று வந்திருக்கிறார்கள்.

திரு உமாசங்கர் IAS அவர்கள் என்னிடம் ஒரு பிளாப்பியில் சாப்டவர் தருகிறோம். அதனை நிறுவி, டேட்டா இன்புட் செய்து தினமும் எங்களுக்கு டேட்டா அனுப்பவேண்டும் என்றார். நானோ அது ரொம்ப கஷ்டம் என்றேன். சுற்றி நின்ற வங்கி ஊழியர்களுகும், துனை செயலாலரும் கொஞ்சம் ஷாக் ஆகி என்னை பார்த்தார்கள். ஒரு கலெக்டர் சொல்லும் பொழுது சரி என்று சொல்லாமல் முடியாது என்று சொல்கிறானே என்று நினைத்தது அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் கலெக்டர் முகத்தில் அதற்கான எந்த ரியாக்ஷனும் இல்லை. ஏன்ன கஷ்டம் என்றார்.

எங்களுடைய சாப்டவர் கோபாலில் எழுதியது. அவருடைய சாப்டவர் விஸ்வல் பேசிக் மற்றும் டேட்டா பேஸ் வைத்து எழுதியது. இரண்டு சாப்ட்வேரையும் லிங் செய்ய முடியாது என்று சொன்னேன். அதில் உள்ள நடைமுறை சிக்கல் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு ஏற்படும் வேலை சுமை அனைத்தையும் கூறினேன். அவர் அதனை புரிந்து கொண்டார். உங்களுக்கு எந்த பார்மெட்டில் தினசரி டேட்டா வேண்டும் என்று சொன்னால் அந்த பார்மெட்டில் தினமும் அனுப்புகிறென் என்று சொன்னேன். கடைசியில் நான் சொன்னதை ஒத்துக்கொண்டார்.

இதனை நான் ஏன் இவ்வளவு விரிவாக சொல்கிறேன் என்றால், அப்பொழுது நான் வயதில் அனுபவத்தில் எல்லாம் மிகவும் சிறியவன். பார்வைக்கு கூட மிகவும் ஒல்லியாக இருப்பேன். ஒரு பொடியன் நாம் சொல்வதை கேட்கவில்லை என்ற என்னம் எல்லாம் அவரிடம் இல்லை. நடைமுறை சிக்கல்களை சொன்னதும் புரிந்துகொண்டார். அவர்போனதும் வங்கியில் ஆளாளுக்கு என்னை காச்சி எடுத்தது தனிக்கதை. அதன் பின்னர் ஒருமுறை வங்கிக்கு வரும் பொழுது என்னிடம் ஒரு சில வார்த்தைகள் பேசி சென்றார்.

திருவாரூர் கலெக்டராக இருக்கும் பொழுது அவர் செய்தவை (எனக்கு தெரிந்தது)

1. நாம் இப்பொழுது மிக சுலபமாக எடுக்கும் கணினி பட்டா, சிட்டா எல்லாம் திரு உமாசங்கர் IAS மற்றும் அவருடைய டீமும் செய்த மென்பொருளில் தான். அதன் சோதனை ஓட்டம் முதன் முதலில் திருவாரூரில் தான் செய்தார்கள்.

2. சிலபல ஆண்டுகளாக தூர் வாராமல் இருந்த திருவாரூர் கமலாலயம் குளத்தை தூர் வாரினார். 4 வேலி அளவு உள்ளது அந்த குளம். அதன் உள்ளே இருந்த 21 கிணறுகளையும் தேடி கண்டுபிடித்து தூர் வாரவைத்தார்.

3. கமலாலயம் குளத்திற்கு நீர் வந்து/செல்லும் பாதைகளை ஆக்கிறமித்திருந்தார்கள். ஆக்கிறமிப்புகளை அகற்றி கொள்ளிடம் ஆற்று தண்ணீர் தங்கு தடையின்றி குளத்திற்கு வரச்செய்தார்.
 
3. இருபத்தோரு வருடங்கள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை சரிசெய்து ஓட வைத்தார். அதுவரை மரத்தினாலான சக்கரம் தான் தேருக்கு இருந்தது. இவர் அதனை இரும்பால் செய்து மாட்டினார்.

4. தேர் புறப்படுவதற்கு முந்தைய இரவு இரு சிறுவர்கள் குளிக்கிறேன் என்று கமலாலயத்தில் மூழ்கிவிட்டனர். அவர்கள் உடல் கிடைக்கும் வரைக்கும் குளத்தின் அருகிலே இருந்து தேடுதலை ஊக்கப்படுத்தினார். உடல் கிடைக்கும் பொழுது காலை 5மணி என்று சொன்னார்கள். ஆறுமணிக்கு தேரோட்டம் தொடங்க செய்தார்.

5. ஒரு முறை புயல் மற்றும் கடும் மழையில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி நீடாமங்கலம் பாலம் உடையப்போகிறது என்று கேள்விப்பட்டு நள்ளிரவில் ஒடிசென்று பார்வையிட்டு பாலம் உடையாமல் இருக்க‌ தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.

6. சிறந்த மென்பொருள் டீம் ஒன்று வைத்து அரசாங்கத்துக்கான மென்பொருள் தயாரித்தார்.

இது எல்லாம் எனக்கு தெரிந்த செய்திகள். எனக்கு தெரியாமல் நிறைய இருக்கலாம். அவ்வளவு சிறந்த ஒரு ..பா அவர்களை நம்முடைய அரசாங்கம் சரியாக பயண்படுத்திக்கொள்ள வில்லை.

அவருடைய தற்பொழுதைய பேச்சுக்களை கேட்பவர்கள் இவர் ஒரு காமெடி பீஸ் என்றே நினைக்கிறார்கள். ஆனால் இவர் ஒன்றும் அப்படி சோடையான ஆள் இல்லை.  சுடுகாட்டு ஊழலை கண்டுபிடித்தார். நாம் இதற்கு முன்னர் உபயோகித்த தேர்தல் அட்டை தயாரிப்பிளும் அரசாங்கத்தின் சார்பில் இருந்தார் என்று நினைக்கிறேன்.

அடுத்து அமைந்த அரசாங்கம் அவருக்கு வேலை கொடுக்காமல் காத்திருப்பில் வைத்திருந்தது. மேலும் சில வழக்குகள் தொடுத்தார்கள். அதன் விரக்தியே அவருடைய தற்பொழுதைய நிலமைக்கு காரணம். 

எப்பொழுதாவது யோசித்திருப்பார் "நாம் ஏன் இந்த பாழாய்போன சுடுகாட்டு ஊழலை கண்டுபிடித்தோம்" என்று.

அரசியல் பங்காளிச் சண்டையில் பந்தாடப்பட்ட திறமையான ஒரு அதிகாரி.