Showing posts with label காண்டா விளக்கு. Show all posts
Showing posts with label காண்டா விளக்கு. Show all posts

Wednesday, December 14, 2016

காண்டா விளக்கு 3 - உமா சங்கர் IAS

அப்பொழுது நான் திருவாரூரில் ஒரு கூட்டுறவு வங்கிக்காக வேலை செய்துகொண்டிருந்தேன். தினமும் மதிய உணவுக்கு பின்னர் வங்கியின் பின்பக்கம் லோன் செக்சனில் சென்று சிறிது அரட்டை அடிக்கும் பழக்கம் இருந்தது. அப்படி ஒருநாள் லோன் செக்சனில் நின்று கொண்டிருக்கும் பொழுது அசிஸ்டண்ட் மேனஜர் ஒருவர் வந்து கலெக்டர் வந்திருக்கிறார். உதவி செய்லாலர் உங்களை கூப்பிடுகிறார், உடனே வாருங்கள் என்றார்அன்றைய தினம் பொது செயலாலர் விடுப்பில் இருந்தார். நான் செல்லும் பொழுது துனை செயலாலர் வெளியே அறைவாசலில் இருந்தார். கலெக்டர் கம்பியூட்டர் சம்பந்தமாக ஏதோ கேள்வி கேட்கிறார். எங்களுங்கு தெரியவில்லை. நீங்கள் பதில் சொல்லுங்கள் என்று என்னை அறைக்குள் கிட்ட தட்ட தள்ளிவிட்டார்.

திருவாரூர் தனி மாவட்டமாக மாறும் பொழுது அதன் முதல் கலெக்டராக திரு உமா சங்கர் IAS அவர்கள் நியமிக்கபட்டார். அவர் எதற்கு இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றேன்.

பின்னாடியே வந்த துனை செயலாலர் இவர் தான் எங்கள் வங்கியின் கணிப்பொறியாலர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். என்னை எதிர்தார்போல் அமரச்சொன்னார். உடனே அமர்ந்துகொண்டேன். இத்தனைக்கும் துனை செய்லாலர் நின்று கொண்டே இருந்தார். எனக்கு அந்த வயதில் காலாட்டும் பழக்கம் இருந்தது. சைக்கலாஜிக்கல் படி உணர்சிவசப்பட்ட நிலையில் அதனை குறைப்பதற்காக ஒரு சில பேர் காலாட்டுவார்கள் என்று பின்னர் புத்தகத்தில் படித்திருக்கிறேன். பின்னாடி இருந்து ஒருவர் முதுகில் மெதுவாக கிள்ளி, காலை ஆட்டாதே என்று செய்கை செய்தார்.

அப்பொழுதைய திமுக அரசு, மகளீர் சுய உதவிக்குளுக்களை ஊக்குவித்த நேரம். அவர்கள் மகளீருக்கான ஒரு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். தினசரி வியாபரத்திற்கு செல்பவர்கள் கந்து வட்டி காரர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம். இத்திட்டத்தின் படி ஒருவருக்கு 100 ரூபாய் கடன் கொடுத்தால் தினசரி 1ரூபாய் விதம் 130 நாட்கள் வசூலிப்பார்கள். மகளீர் வங்கிக்கு வரவேண்டிய அவசியம் கூட இல்லை. வங்கியில் இருந்தே ஒருவர் போய் வசூல் செய்துவிட்டு வருவார். அருமையான திட்டம். மகளீர் தினமும் காலையில் கந்து வட்டிகார்களிடம் போய் நிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாலையில் சம்பாத்தியத்தில் பாதியை கந்துவட்டிகாரனுக்கு கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. முதலுக்கான பணம் கடன் திட்டம் மூலம் கிடைக்கும், தினமும் சம்பாத்தியத்தில் இருந்து 1 ரூபாய் கட்டினால் போதும். அன்றைய அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறை படுத்தி உண்ணிப்பாக‌ மேற்பார்வை செய்துகொண்டிருந்தது. அதற்கு தினமும் தேவையான தகவல்களை வங்கியில் இருந்து அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

திருவாரூர் கலெக்டர் திரு உமாசங்கரிடம் ஒரு மென்பொருள் தயாரிக்கும் டீம் இருந்தது. அவர்கள் இந்த மகளீர் கடன் திட்டத்திற்கு ஒரு  மென் பொருள் தயாரித்திருந்தார்கள். நான் இருந்த வங்கி திருவாரூர், நாகப்பட்டணம், தஞ்சாவூர், மாயவரம், கும்பகோணம் பகுதியில் கனிணி மயமாக்களில் மிகவும் பெயர் வாங்கியது. அதனால் முதன் முதலில் நான் இருந்த வங்கியில் அதனை நிறுவி சோதித்து பார்க்கலாம் என்று வந்திருக்கிறார்கள்.

திரு உமாசங்கர் IAS அவர்கள் என்னிடம் ஒரு பிளாப்பியில் சாப்டவர் தருகிறோம். அதனை நிறுவி, டேட்டா இன்புட் செய்து தினமும் எங்களுக்கு டேட்டா அனுப்பவேண்டும் என்றார். நானோ அது ரொம்ப கஷ்டம் என்றேன். சுற்றி நின்ற வங்கி ஊழியர்களுகும், துனை செயலாலரும் கொஞ்சம் ஷாக் ஆகி என்னை பார்த்தார்கள். ஒரு கலெக்டர் சொல்லும் பொழுது சரி என்று சொல்லாமல் முடியாது என்று சொல்கிறானே என்று நினைத்தது அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் கலெக்டர் முகத்தில் அதற்கான எந்த ரியாக்ஷனும் இல்லை. ஏன்ன கஷ்டம் என்றார்.

எங்களுடைய சாப்டவர் கோபாலில் எழுதியது. அவருடைய சாப்டவர் விஸ்வல் பேசிக் மற்றும் டேட்டா பேஸ் வைத்து எழுதியது. இரண்டு சாப்ட்வேரையும் லிங் செய்ய முடியாது என்று சொன்னேன். அதில் உள்ள நடைமுறை சிக்கல் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு ஏற்படும் வேலை சுமை அனைத்தையும் கூறினேன். அவர் அதனை புரிந்து கொண்டார். உங்களுக்கு எந்த பார்மெட்டில் தினசரி டேட்டா வேண்டும் என்று சொன்னால் அந்த பார்மெட்டில் தினமும் அனுப்புகிறென் என்று சொன்னேன். கடைசியில் நான் சொன்னதை ஒத்துக்கொண்டார்.

இதனை நான் ஏன் இவ்வளவு விரிவாக சொல்கிறேன் என்றால், அப்பொழுது நான் வயதில் அனுபவத்தில் எல்லாம் மிகவும் சிறியவன். பார்வைக்கு கூட மிகவும் ஒல்லியாக இருப்பேன். ஒரு பொடியன் நாம் சொல்வதை கேட்கவில்லை என்ற என்னம் எல்லாம் அவரிடம் இல்லை. நடைமுறை சிக்கல்களை சொன்னதும் புரிந்துகொண்டார். அவர்போனதும் வங்கியில் ஆளாளுக்கு என்னை காச்சி எடுத்தது தனிக்கதை. அதன் பின்னர் ஒருமுறை வங்கிக்கு வரும் பொழுது என்னிடம் ஒரு சில வார்த்தைகள் பேசி சென்றார்.

திருவாரூர் கலெக்டராக இருக்கும் பொழுது அவர் செய்தவை (எனக்கு தெரிந்தது)

1. நாம் இப்பொழுது மிக சுலபமாக எடுக்கும் கணினி பட்டா, சிட்டா எல்லாம் திரு உமாசங்கர் IAS மற்றும் அவருடைய டீமும் செய்த மென்பொருளில் தான். அதன் சோதனை ஓட்டம் முதன் முதலில் திருவாரூரில் தான் செய்தார்கள்.

2. சிலபல ஆண்டுகளாக தூர் வாராமல் இருந்த திருவாரூர் கமலாலயம் குளத்தை தூர் வாரினார். 4 வேலி அளவு உள்ளது அந்த குளம். அதன் உள்ளே இருந்த 21 கிணறுகளையும் தேடி கண்டுபிடித்து தூர் வாரவைத்தார்.

3. கமலாலயம் குளத்திற்கு நீர் வந்து/செல்லும் பாதைகளை ஆக்கிறமித்திருந்தார்கள். ஆக்கிறமிப்புகளை அகற்றி கொள்ளிடம் ஆற்று தண்ணீர் தங்கு தடையின்றி குளத்திற்கு வரச்செய்தார்.
 
3. இருபத்தோரு வருடங்கள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை சரிசெய்து ஓட வைத்தார். அதுவரை மரத்தினாலான சக்கரம் தான் தேருக்கு இருந்தது. இவர் அதனை இரும்பால் செய்து மாட்டினார்.

4. தேர் புறப்படுவதற்கு முந்தைய இரவு இரு சிறுவர்கள் குளிக்கிறேன் என்று கமலாலயத்தில் மூழ்கிவிட்டனர். அவர்கள் உடல் கிடைக்கும் வரைக்கும் குளத்தின் அருகிலே இருந்து தேடுதலை ஊக்கப்படுத்தினார். உடல் கிடைக்கும் பொழுது காலை 5மணி என்று சொன்னார்கள். ஆறுமணிக்கு தேரோட்டம் தொடங்க செய்தார்.

5. ஒரு முறை புயல் மற்றும் கடும் மழையில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி நீடாமங்கலம் பாலம் உடையப்போகிறது என்று கேள்விப்பட்டு நள்ளிரவில் ஒடிசென்று பார்வையிட்டு பாலம் உடையாமல் இருக்க‌ தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.

6. சிறந்த மென்பொருள் டீம் ஒன்று வைத்து அரசாங்கத்துக்கான மென்பொருள் தயாரித்தார்.

இது எல்லாம் எனக்கு தெரிந்த செய்திகள். எனக்கு தெரியாமல் நிறைய இருக்கலாம். அவ்வளவு சிறந்த ஒரு ..பா அவர்களை நம்முடைய அரசாங்கம் சரியாக பயண்படுத்திக்கொள்ள வில்லை.

அவருடைய தற்பொழுதைய பேச்சுக்களை கேட்பவர்கள் இவர் ஒரு காமெடி பீஸ் என்றே நினைக்கிறார்கள். ஆனால் இவர் ஒன்றும் அப்படி சோடையான ஆள் இல்லை.  சுடுகாட்டு ஊழலை கண்டுபிடித்தார். நாம் இதற்கு முன்னர் உபயோகித்த தேர்தல் அட்டை தயாரிப்பிளும் அரசாங்கத்தின் சார்பில் இருந்தார் என்று நினைக்கிறேன்.

அடுத்து அமைந்த அரசாங்கம் அவருக்கு வேலை கொடுக்காமல் காத்திருப்பில் வைத்திருந்தது. மேலும் சில வழக்குகள் தொடுத்தார்கள். அதன் விரக்தியே அவருடைய தற்பொழுதைய நிலமைக்கு காரணம். 

எப்பொழுதாவது யோசித்திருப்பார் "நாம் ஏன் இந்த பாழாய்போன சுடுகாட்டு ஊழலை கண்டுபிடித்தோம்" என்று.

அரசியல் பங்காளிச் சண்டையில் பந்தாடப்பட்ட திறமையான ஒரு அதிகாரி.

Tuesday, January 21, 2014

காண்டா விளக்கு 2.2 - நடுக்கத்தின் சாட்சி (பயம்)

அப்பொழுது ஒரு ஹோட்டலின் 13 வது மாடியில் தங்கி இருந்தேன். 2007-ஆம் ஆண்டு தைவான் வந்த புதிதில் வீடு கிடைக்காமல் ஹோட்டலில் தங்க வைத்திருந்தார்கள். ஜெட் லாக் இருந்த சமயம் அது. சென்னை நேரத்துக்குத் தான் தூக்கம் வரும். அன்று இரவும் 12 மணிக்கு மேல் தான் தூங்க சென்றேன். நல்ல தூக்கத்தில் கட்டிலானது தொட்டில் போல் அங்கேயும் இங்கேயும் ஊஞ்சல் ஆடியது. கண்ணைத் திறந்து பார்த்தால் கட்டிடமே ஆடிக்கொண்டிருந்தது. அதில் என்னுடைய கட்டில் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துப் பயத்தில் எழுந்து நின்றேன். என்னால் நிற்க முடியவில்லை. காணாத குறைக்கு ஒரு விதமான மயக்கம் வேறு. கட்டிலில் தொப்பென்று விழுந்தேன்.
தைவானில் உள்ள 101 மாடி கட்டிடத்தில் உள்ள அமைப்பு. கட்டிடம் ஆடும் பொழுது மைய‌ஈர்ப்பு விசயை விட்டு விலகாமல் இருக்க இப்படி ராட்ச குண்டுகள் சில மாடிகளில் வைத்திருக்கின்றார்கள்.

நிலநடுக்கம் வரும் பொழுது கட்டிலுக்கு அடியில் அல்லது மேஜைக்கு அடியில் போய்ப் பதுங்க சொல்லுவார்கள். ஏதாவது உடைந்து விழுந்தால் நம் மீது நேரடியாக விழாது. தைவானில் இருக்கும் கட்டிலில் எல்லாம் நம் ஊரில் உள்ள கட்டில் போன்று உயரமான கால்கள் இருக்காது. தரையோடு இருக்கும். அதன் இடைவெளியில் ஒரு எலி வேண்டுமானால் நுளையலாம். கட்டிலை விட்டுக் கொஞ்சம் தூரமாகச் சிறிய மேஜை இருந்தது. இந்த ஆட்டத்தில் அதனை நோக்கி போவது எல்லாம் குதிரை கொம்பு. கட்டிடத்தில் இருந்து கட கட என்று சத்தம் வேறு வந்து பயத்தை அதிகப்படுத்தியது. அப்பொழுது தான் ஒரு யோசனை வந்தது. ஏதாவது ஒரு லின்டல்(குறுக்காக வரும் கான்கிரீட் பில்லர்) க்கு கீழே போய் நின்று கொண்டால் ஏதாவது உடைந்தால் முதலில் அது கொஞ்சமேனும் தாங்கிக்கொள்ளும் என்று தோன்றியது. உடனே கட்டிலுக்குப் பக்கத்தில் லின்டல் இருக்கின்றதா என்று தேடினால், அறையையும், குளியல் அறையயும் பிரிக்கப் போட்டிருந்த லின்டல் இருந்தது. சுவர் போகக் கொஞ்சம் வெளிபக்கமாக நீட்டிக்கொண்டிருந்தது. சரி அதற்குக் கீழே(??) போய் நிற்கலாம் என்று கட்டிலை விட்டு எழுந்து இரண்டு கையையும் விரித்துச் சுவரை ஆவிகெட்டியாகப்(!) பிடித்துகொண்டு நின்றுகொண்டேன்.

கட்டிடம் ஆடுவதோ நின்ற பாடில்லை. பயம் வேறு ஆட்டிப்படைத்தது. "தரை பொத்துக்கொண்டு கீழே போயிட்டா" அப்படி என்று என்னும்பொழுதே பயம் பந்து போல அடிவயிற்றில் உருண்டு மேல வந்தது. தெரியாத ஊருல இப்படி அனாதையா வந்து மாட்டிக்கொண்டோமே. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சின்னா என்ன பன்னுறது என்ற எண்ணம் அலைமோதியது. வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொருவாரா கண்ணுக்குள் வந்து சென்றார்கள். ஆனால் இத்தனை களோபரத்திலும் வெளியே நிலநடுக்கம் வருகின்றது என்பது போன்ற ஒரு சத்தம் கூடக் கேட்க வில்லை. நாம் மட்டும் தான் இந்தத் தளத்தில் தங்கி இருக்கின்றோமோ என்ற எண்ணம் வேறு பயத்தை அதிகரித்தது. நம் ஊராக இருந்தால் போடுகின்ற கூச்சலிலே பாதிப் பயம் போய்டும்.

ஒரு வழியாகக் கட்டிட ஆட்டம் குறைந்து. சுவரை ஆவிகட்டி நிற்பதை விடுத்து மெதுவாகக் கட்டிலில் உட்கார்ந்தேன். கீழே தரைதளத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு டி-ஷர்ட் எடுத்துப் போட்டுக்கொண்டு கதைவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தேன். காரிடாரில் ஒருவர் ஏணியைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஏணியின் மேலோ இன்னொருவர் நின்று ஆணி அடித்துக்கொண்டிருந்தார். நிலநடுக்கம் நின்று முழுவதுமாக 1 நிமிடம் கூட இருக்காது. அதற்குள் இவர்கள் எப்படி வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓரு வேலை நாம் தான் கனவு எதாவது கண்டு பயந்துவிட்டோமா என்று தோன்றியது. எதற்கும் அவர்களைக் கேட்டுவிடலாம் என்று மெதுவாக நடந்து அருகில் சென்றேன்.

ஏணியைப் பிடித்துக் கோண்டிருந்தவர் ஏற்கெனவே தெரிந்தவர் தான். ஹோட்டலில் வரவேற்பரையில் சில நேரங்களில் இருப்பார். கொஞ்சம் ஆங்கிலம் வேறு பேசுவார். அவரிடம் நீங்கள் தற்பொழுது ஏதாவது உணர்ந்தீர்களா என்று கேட்டேன். ஆம், நிலநடுக்கம் வந்தது என்றார். மேலே இருப்பவர் மீண்டும் ஆணி அடித்துக்கொண்டிருந்தார்.

சரிதான், என்று திரும்பி வந்து கட்டிலில் படுத்து தூங்க ஆரம்பித்தேன்.
 
 
குறிப்பு: நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலின் படி கிட்டதட்ட 6.5 என்று நினைக்கிறேன். அடுத்த நாள் நண்பர்கள் அனைவரும் தாங்கள் அனைவரும் பயத்தில் ரோட்டிற்கு வந்துவிட்டதாகவும், கண நேரம் ரோட்டிலே இருந்த‌தாகவும் கூறினார்கள். உணமையாகவே மரணபயத்தை உண்டாக்கிய ஒரு நிகழ்வு அது.

Wednesday, December 25, 2013

காண்டா விளக்கு 2.1 - நடுக்கத்தின் சாட்சி (ஆழிப்பேரலை)

இன்றோடு சரியாக ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டது. அன்று நடந்ததை இன்று நினைத்தாலும் மனம் கனத்துவிடுகின்றது.

வருடம் 2004 மாதம் டிசம்பர் 26 ஆம் நாள். முந்தய நாள் கிருஸ்த்மஸ் கொண்டாட்டம் முடித்து பின் இரவில் தான் படுக்கைக்கு சென்றேன். அப்பொழுது சென்னையில் என்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கி இருந்து தான் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். திருவல்லிக்கேனி நெடுஞ்சாலையில் ஸ்டார் தியேட்டருக்கு நேர் எதிராக இருக்கும் கட்டிடம். கீழே மூன்று தளங்களிலும் சிறிய அலுவலகங்கள் இருக்கும், நான்காம் மாடியில் நாங்கள் மட்டும் இருந்தோம். எனக்கு என்று தனியாக ஓர் அறை. அதில் ஒரு மடக்க கூடிய கயிற்று கட்டில். என்னுடைய சகோதரியின் குழந்தைகளுக்கு என்னோடு விளையாட பிடிக்கும். நான் தான் அதிகமாக விளையாடுவதில்லை. நான் என்னுடைய அறைக்கு வந்துவிட்டால், நான் என்ன செய்கிறேன் என்று ஒளிந்து வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். 26 ஆம் தேதி காலை சுமார் 6.30 மணியிருக்கும் என்னுடைய கட்டில் ஆடியது. நல்ல தூக்க கலக்கம். என்னுடைய சகோதரி மகள் தான் வந்து கட்டிலை ஆட்டிகொண்டிருக்கின்றாள் என்ற நினைப்பில் கண்களை திறவாமலே "மாமா தூங்கி கொண்டிருக்கின்றேன், நாம் அப்புறமா விளையாடலம், நீ போய் டிவி பார்" என்று சொல்லி முடிக்கவில்லை, மீண்டும் அதே போன்ற ஒரு ஆட்டம். கண்களை வலியக்க திறந்தால் அறையில் யாரும் இல்லை. பின்னர் யார் கட்டிலை ஆட்டியது என்று அப்படியே ஒருக்களித்து பார்த்தால், மீண்டும் கட்டில் ஆடத்தொடங்கியது. முதலில் என்னவோ எதோ என்று பயம் வந்தாலும், கதவை கவனிக்கும் போது அதில் ஒரு சிறு அதிர்வு தெரிந்தது. ஜன்னலை எட்டி பார்த்தால் அதன் கதவும் அன்றாக ஆடியது. இது நிலநடுக்கம் என்ற உணர்வு மூளையை தொட்ட உடனே படுக்கையில் இருந்து எழுந்து அடுத்த அறைக்கு ஓடினேன்.
 
நாங்கள் இருந்த கட்டிடம் கொஞசம் பழையது. எதுவேணும் நடக்கலாம். முதலில் வீட்டில் இருப்பவர்களை எழுப்பி கீழ் தளத்துக்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியது. அடுத்த அறைக்கு சென்று நிலநடுக்கம் வந்து கொண்டிருக்கு எல்லோரும் கீழே ஓடுங்கள் என்றேன். அவர்கள் யாரும் நிலநடுக்கத்தை உணரவில்லை. எனக்கோ விளக்கம் சொல்ல நேரமில்லை. எல்லோரும் முதலில் கீழே இறங்குங்கள் என்று கூறி அனுப்பிவிட்டு நானும் கீழே இறங்கி சென்றேன். தரை தளத்தில் ஒரு டீ கடை இருந்தது. சில பேர் நின்று டீ குடித்து கொண்டிருந்தார்கள். டீ மாஸ்டர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். நன்றாக பேசுவார். நாங்கள் எல்லோரும் காத்தாலே கீழே இறங்கியதும் அவர் எங்கு போகின்றீர்கள் என்றார். நிலநடுக்கம் அதான் எல்லோரும் கீழே வருகின்றோம் என்றேன். அவர் நாங்கள் யாரும் உணரவில்லையே என்றார். பக்கத்தில் நின்றவர்களும் நாங்களும் உணரவில்லை என்று சொன்னார்கள். எங்கள் வீட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் என்னை குறை கூற ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு வேலை நாம் 4ஆம் மாடியில் இருந்ததால் உண்ர்ந்திருப்போம் இவர்கள் கீழே இருந்ததால் உணரவில்லை என்று சமாளித்தேன். ஆனால் யாரும் நம்பியது போல் தெரியவில்லை. மேலும் ஒரு 10 நிமிடம் கீழே நின்று கொண்டிருந்தோம். பக்கத்து தெருவில் இருந்து வந்த ஒருவர், நிலநடுக்கம் அதிகமாக இருந்தது என்று யாரிடமோ உரக்க சொன்னார். அப்பொழுதுதான் எங்கள் வீட்டிலிருந்தவர்களும் டீக்கடையில் நின்றவர்களும் என்னை நம்ப ஆரம்பித்திருந்தார்கள். சிறிது நேரம் கழித்து தொடர் நடுக்கம் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு மேலே வந்தோம்.
 
காலை 9:30 மணிக்கு குளித்துகொண்டிருந்தேன். கச்சா முச்சா என்று கூச்சல் கேட்க ஆரம்பித்தது. என்னுடிய அத்தானிடம் என்ன சத்தம் என்று கேட்டால் கடல் தண்ணீர் உள்ளே வருதாம் அதனால் பிளாட்பாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் மேலே ஏறி வந்துவிட்டார்கள், அதான் இந்த சத்தம் என்றார். எவனோ ஒருத்தன் நல்லா புரளியை கிளப்பி விட்டுருகான், கடல் தண்ணீர் எப்படி உள்ளே வரும் என்றேன். இல்லை கடல் தண்னீர் உள்ளே வருகின்றதாம், கண்ணகி சிலைய தாண்டி ஸ்டேடியம் பக்கம் வந்திருச்சாம். இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டு பக்கம் வந்திடுமாம் என்று சொன்னார்.  டிவியை வச்சி பாருங்க என்றேன். எந்த சானலிலும் இதை பற்றி ஒன்றும் சொல்ல வில்லை என்றார். நாம் போய் என்ன ஏது என்று பார்த்துவிட்டு வருவோம் என்று அவரையும் அழைத்துக்கொண்டு படி இறங்கி கீழே செல்ல ஆரம்பித்தோம்.
 
பிளாட்பாரத்தில் குடியிருந்தவர்கள் அனைவரும் மூன்றாம் மாடிக்கு வந்து நின்றுகொன்டிருந்தார்கள். கூடவே அவர்களுக்கு வேண்டிய சாமான்களும் மூட்டையில் இருந்தது.  கீழே போய் வண்டியை எடுத்து புறப்படும் பொழுது, அவரோ ஒரு சந்துக்குள் போய் அப்படியே சேப்பாக்கம் வழியாக போய்விடலாம் என்றார். நானோ இது தவறான ஐடியா. ஆத்திர அவசரத்துல திரும்பி வரும் போது எதாவது முட்டு சந்துக்குள்ள மாட்டிக்க கூடாது அதனால் கண்ணகி சிலைக்கு எதிர் ரோட்டை பிடித்து(ராயப்பேட்டை ரோடு என்று நினைக்கிறேன்) போகலாம் என்று அந்த வழியாக போக ஆரம்பித்தோம். ரோட்டில் நெரிசலே இல்லை. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வந்து கண்ணகி சிலைக்கு போகும் ரோட்டில் திரும்பினோம். அங்கும் நெரிசலே இல்லை. அப்படியே மெதுவாக போய் ஸ்டேடியத்தை தாண்டினோம். ஒரு சொட்டு தண்ணீரும் தெரியவில்லை. பார்த்தீங்கலா எவனோ ஒருத்தன் ஸ்டேடியம் தாண்டி தண்ணீர் வந்துடுச்சி என்று புரளி கிளப்பிவிட்டுடான் என்று அவரிடம் கூறி சிரித்துக்கொண்டே, கண்ணகி சிலை வரைக்கும் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று மேலும் வண்டியை ஒட விட்டோம். வண்டி பறக்கும் ரயில் பாலத்தையும் தாண்டிவிட்டது, ஒரு சொட்டு தன்ணிர் கூட தெரியவில்லை. அப்படியே போய்கொண்டிருந்தோம். கண்ணகி சிலைக்கு முன்னாடி ஒரு சின்ன விளையாட்டு மைதானம் இருக்கும். அங்கு நிறைய பேர் கிரிக்கெட் விளையாடுவார்கள். அந்த இடம் வந்ததும் போலீஸ்கார்ர் ஒருவர் குறுக்கால ஓடி வந்து வண்டியை நிறுத்தினார்.
 
அங்கு வண்டி போகாது, நீ இங்க நிறுத்தி நடந்து போ என்றார். அப்பொழுதுதான் எதோ ஒன்று நடந்திருக்கு என்ற என்னம் லேசாக மனதிற்குள் தோன்றியது. ஆனால் மக்கள் சொன்ன மாதிரி அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தண்ணீரும் தெரியவில்லை வேறு விபரீதம் நடந்த அடையாளமும் தெரியவில்லை. ஒரே ஒரு வித்தியாசம். விடுமுறை நாட்கள் என்றால் காலை முதல் மாலை வரை ஜே ஜே என்று இருக்கும் அந்த விளையாட்டு மைதானம் ஈ ஓட்டிக்கொண்டிருந்தது. வண்டியை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு கண்ணகி சிலை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.

கண்ணகி சிலைக்கு மிக அருகில் வரும்பொழுது ரோட்டின் இரு பக்கமும் நன்றாக பார்க்க முடிந்தது. முதன் முதலாக ரோட்டின் மத்தியில் ஒரு மோட்டார் வைத்து ஓடக்கூடிய கொன்சம் பெரிய மீன் படகு கவிழ்ந்து கிடந்தது. ஆனால் ரோட்டில் ஒரு துளி தண்ணீர் இல்லை. இது எப்படி இங்கு வந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டே மேலும் முன்னேறினோம்.
 
காமராஜர் சாலையானது கடற்கரை மணல் பரப்பிலிருந்து மூன்று, நான்கு அடிகள் உயரமாக இருக்கும். அதனால் ரோட்டின் இந்த கரையில் வந்து பார்த்தால் தான் நன்றாக தெரியும். இந்த கரையில் வந்து பார்த்தால் பீச் கன்னா பின்னா என்று என்று இருந்தது. படகுகள் ரோட்டின் ஓரமாக குவிந்து கிடந்தன. கார்கள் தலைகுப்பற உருண்டு கிடந்த்தன. இந்திய கடற்கரை பாதுகாப்பு கப்பல் ஒன்று மெரினா கடலின் கரைக்கு அருகே நின்று கொண்டிருந்தது. கடலுக்குள் இருந்து ஒரு ஹெலிகாப்டர் வெளியே வந்து கொண்டிருந்தது. அதில் கயிற்றில் எதோ தொங்கிகோன்டிருந்தது. அது சடலமாக இருக்க கூடும்(அடுதத நாள் செய்திகளில் ஹெலிகாப்டர் கொண்டு கடலுக்குள் இருந்து சடலம் எடுத்ததாக போட்டிருந்தார்கள்).
நான் செல்லும் பொழுது கடலானது அதன் வழக்கமான எல்லைக்குள்ளே இருந்தது. இத்தனை களோபரத்திலும் நம் மக்கள் கடற்கரையில் கடல் அலையில் நின்று கொண்டிருந்தார்கள். கடல் வழக்கம் போல் இல்லாமல் ஓங்கரித்துக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் ஒரு பெருத்த அலை வருவது போன்றிருந்தது. கடற்கரையில் நின்ற மக்கள் ரோட்டை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். நீங்கள் நம்புவீர்களா இல்லயா என்று எனக்கு தெரியவில்லை. கடற்கரைக்கும் - ரோட்டிற்கும் இடையில் குறைந்தது ஒரு 300 மீட்டர் இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை கடல் அலை நிர‌ப்ப எடுத்துக்கொண்ட கால அளவு வெறும் 3 - 4 வினாடிகள் மட்டுமே. ரோடு உயரமாக இருந்ததால் அதனை தாண்டி வரவில்லை. நடுவில் கிடந்த படகு கார்கள் எல்லாம் அந்த அலையில் அடித்து வரப்பட்டு ரோட்டின் கரையில் மோதின. எவ்வளவு வேகத்தில் வந்ததோ அதே வேகத்தில் கடல் அலை மீண்டும் உள்வாங்கியது. உள்வாங்க ஒரு 30 வினாடிகள் எடுத்துக்கொண்டு மீண்டும் அதன் எல்லையில் போய் நின்று கொண்டது. நான் அங்கு ஒரு 30 நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். அதற்குள் நான்கு முறை ஆழிப்பேரலை வந்து ரோட்டை தொட்டு விட்டு சென்றது.


பின் அலையின் உக்கிரமே இப்படி இருக்கும் என்றால் முன் அலை(முதல் ஆழிப்பேரலை) எவ்வளவு வேகத்தில் வந்திருக்கும். அதன் தாக்கமே முகப்பெரிய படகு நடு ரோட்டில் கிடந்தது. நடைபயிற்சி சென்றவர்கள், கிரிக்கெட் விளையாடிய விடலை பசங்க என்று ஒட்டு மொத்தமாக சூறையாடியது. ஆனால் இது எதனையும் உணராமல் குறைந்தது ஒரு 50 பேர் பின் அலைகளில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அலை வரும் பொழுது வெளியே ஒடி வருவதும் அலை வடிந்ததும் மீண்டும் கடற்கரைக்கு செல்வதுமாக. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்.
 
பொய், யாரோ ஏமாற்றுகின்றார்கள் என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டே வந்த நான் கனத்த இதயத்துடன் வீடு திரும்பினேன். திருப்பிய சானல் எல்லாம் இதனையே ஒளிபரப்பினார்கள். அடுத்து நாள் வந்த செய்தித்தாள்களை எல்லாம் மனம் கொண்டு படிக்க முடியவில்லை. சென்னை, கடலூர், நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் என்று கடற்கரைகள் அனைத்தும் சின்னாபின்னமாயின. வித விதமான காட்சிகள் செய்திகளாக பட்டிருந்தன. செய்திதாளை பார்துக்கொண்டிருந்த போது மாமல்லபுரத்தில் இருந்த தமிழ்நாடு டூரிசம் டெவெலப்மெண்ட் கார்பரேசனுக்கு செந்தமான ரிசாகட் முழுவதுமாக அழிந்தது என்று படத்தோடு போட்டிருந்தார்கள். பக் என்றது. சரியாக 7 நாட்கள் முன்னர் அதே ஞாயிறு அன்று சுமார் 250 பேர் அங்கு தங்கியிருந்தோம். நான் தங்கி இருந்த கட்டிடம் முழுவதுகாக கடலுக்கு இரையாகியிருந்தது.

நிறைய பேர் வீடு, வாசல், சொந்தம் என்று இழப்புகள் மிக மிக‌ அதிகம். மீட்புபணிகள் ஒரு வாரத்துக்கு சிறப்பாகவே நடந்தது என்று நினைக்கிறேன். அந்த சம்பவத்திற்கு பின்னர் இரண்டு முறை ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. ஆனால் அவர்களுக்குறிய நிவாரணம் சரியாக சென்றடைந்ததா என்பது தான் தெரியவில்லை.

                                                                                                                        தொடரும்...
படங்கள் உதவி : கூகுளாண்டவர்
 

Thursday, November 28, 2013

காண்டா விளக்கு 2.0 - நடுக்கத்தின் சாட்சி

சென்னை-அடையாறு சிக்னல் பக்கத்தில் விமானம் இடித்துகொண்டு நிற்பது போன்று ஒரு கட்டடம் இருக்கும். அது தான் பிஸா கார்னர். அதற்குப் பின்புறம் இருக்கும் தெருவில் சென்னையின் புகழ்பெற்ற "சிஸ்யா" பள்ளிக்கூடம் இருக்கின்றது. அதே தெருவில் ஒரு சிறிய வீட்டின் மாடியில் நான் வேலை பார்த்த அலுவலகம் இருந்தது. அந்த வீடு எங்கள் முதலாளியுடையது. அதை அலுவலகமாக மாற்றி வைத்திருந்தார். மொத்தமாக 20 பேர் வேலை பார்க்கக்கூடிய சிறிய அலுவலகம்.

 2001 அல்லது 2002 தொடக்கம் என்று நினைக்கிறேன். சரியான வருடம் நினைவில் இல்லை. ஒரு முக்கியமான வேலையை முடிக்க வேண்டி அனைவரும் இரவு 7 மணிக்கு மேலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்களுடிய மேனேஜர் செல்லையா கனிணியில் எதோ பிரச்சனை என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்ன செய்கிறார் என்று பார்த்துகொண்டே அவருடன் பேசிக்கொன்டிருந்தேன். திடீரென ஒரு விதமான மயக்கம் வருவது போன்ற ஓர் உணர்வு. அந்த உணர்ச்சி ஒரு நொடி பொழுது என்றாலும் எனக்கு நன்றாகத் தெரிந்தது. உடனே செல்லையாவை திரும்பி பார்த்தேன். அவருக்கும் அதே உணர்வு இருந்திருக்க வேண்டும், என்னைத் திரும்பி பார்தார். சில வினாடிகளில் மீண்டும் ஒரு சிறிய அதிர்வு. இது தான் நிலநடுக்கம் என்று எங்களுக்குப் புரிய ஆரம்பித்ததும் "நிலநடுக்கம் வருகின்றது எல்லோரும் கீழே ஓடுங்கள்" என்று மெலிதான ஒரு கூச்சலிட்டோம் . எங்கள் அலுவலகம் மாடியில் இருந்தது. அங்கிருந்த எல்லோரையும் போட்டது போட்ட படி வெளியேறுங்கள் என்று அனுப்பிவிட்டுக் கடைசியாக டாய்லட்டில் யாரவது இருக்கின்றார்களா என்று பார்த்துவிட்டு நானும் அவரும் கீழே செல்ல ஆரம்பித்தோம்.
 
இது எல்லாம் கிட்ட தட்ட ஒரு 30 விநாடிகளில் நடந்துவிட்ட ஒன்று. நான் முன்னாடி அரை ஓட்டமாகச் செல்கின்றேன். எனக்குப் பின்னர் அவர் கொஞ்சம் வேகமாக நடந்து வந்து கொண்டிருக்கின்றார். மாடிப்படி இறங்கிவந்தால் யாரோ ஒரு புண்ணியவான் இந்தக் களோபரத்திலும் கேட்டை பூட்டிவிட்டு ரோட்டில் போய் நின்று கொண்டிருந்தான். அரைகுறை வேகத்தில் ஓடி வந்த எனக்குக் கேட்டோட கொண்டியை எடுத்து திறந்து விட்டு வெளியே செல்வோம் என்று தோன்றவில்லை. கேட்டில் இரு கைகளையும் ஊன்றி ஒரே குதி, ரோட்டிற்கு வந்து செல்லையா வந்துவிட்டாரா என்று எட்டி பார்த்தேன். அவர் என்னிடம் "ஏன் இப்படி எகிறி குதிச்சி வெளியே போற, கேட் ஏற்கெனவே திறந்து தானே இருக்குது" என்று சொல்லி கொண்டே, கேட்டை இழுத்து திறந்து வெளியே வந்தார். நான் தான் பதட்டத்தில் சரியாகக் கவனிக்காமல் சர்க்கஸ் காட்டியிருக்கிறேன். அந்தத் தெருவில் வசித்த ஒட்டு மொத்த பேரும் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். சென்னையில் பல இடங்களுக்கு மின்சார வினியோகம் தற்காலிகமாக நிற்தி வைக்கப்படிருந்தது. அன்றும் அடுத்த நாளும் சென்னை முழுவதும் இதே பேச்சு தான். இது தான் நான் உணர்ந்த முதல் நில நடுக்கம்.

  
                                                  நடுக்கம் தொடரும்....

Sunday, September 22, 2013

காண்டா விளக்கு 1.1

முதல் பாகம் படிக்காதவர்கள் காண்டா விளக்கு 1.0 வாசித்துவிட்டு இதனை படிக்கவும்.
 
இந்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். முதலில் எவ்வளவு கட்டவேண்டும் என்று பார்த்துவிட்டு அதற்கு பின்னர் முடிவு செய்வோம் என்று கூறினேன். எனக்கு தெரியும் அந்த 100 ரூபாயை வைத்து டிரான்சிட்டில் போடப்படும் சார்ஜிக்கு சோளப்பொரி வாங்கி கூட போட முடியாது. 100 ரூபாயை தவிர அவரிடம் வேறு எதுவும் இருப்பது போன்றும் தெரியவில்லை.
 
எனக்கு பசிப்பது போன்று இருந்தது. அவரிடம் ஏதாவது சாப்பிடுகின்றீர்களா என்று கேட்டேன். அவர் தான் நோன்பில் இருப்பதாக சொன்னார். அவர் முஸ்லீம் என்பதற்கு இது ஒன்று தான் சாட்சி. இருக்கப்பட்டவன் சாப்பிடாமல் இருந்தால் நோன்பு. இல்லாதவனுக்கு எப்பவுமே நோன்புதான் என்பது எனோ நினைவில் வந்தது. இங்கேயே இருங்கள் கொஞ்ச நேரத்தில் வருகின்றேன் என்று கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு ஏதாவது சைவம் கிடைக்கின்றதா என்று தேட ஆரம்பித்தேன். சைவத்துக்கு மாறி சில மாதங்களே ஆகின்றது. அதனால் கடை கடையாக விசாரிக்க வேண்டியிருந்தது. எதோ ஒரு சந்துக்குள் இருந்த கடையில் சாண்ட்விச் கிடைத்தது. அதில் இரண்டு வாங்கி கொண்டு ஒரு தண்ணிர் பாட்டலும் வாங்கி கொண்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்தேன். அவரிடம் ஒன்று கொடுத்து நானும் ஒன்றை சாப்பிட ஆரம்பித்தேன்.
 
இன்னும் ஒரு மணிநேரம் இருந்தது. அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.
 
"உங்க சொந்த ஊர் எது" இது நான்.
"சீர்காழி பக்கமுங்க" இது நண்பர்.
"அங்க என்ன வேலை செஞ்சிங்க"
"டீக்கடைங்க"
" டீக்கடையில என்ன வேலை பார்த்திங்க, டீ மாஸ்டரா?"
"சொந்த கடைங்க, டீ மாஸ்டரும் நாந்தாங்க "
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சொந்த கடைய உட்டு போட்டு எதுக்கு வெளிநாட்டுக்கு வேலைக்கு போகின்றார் என்று.
"புருனேலே என்ன வேலை?" இது நான்.
"தெரிஞ்சவுங்க டீக்கடை வச்சிருக்காங்க அங்க வேலைக்கு போறேங்க"
"அங்க போயும் டீக்கடைதான? "ஏன் சொந்த கடையவிட்டுட்டு வெளிநாட்டுக்கு போறிங்க"
"ஊருல  வியாபாரம் கொஞ்சம் சுமார்தாங்க. மூணு பொண்ணுங்க வேற. அதான் என்னோட மாமியார் வெளிநாட்டுல வேலைக்கு அனுப்பரா!"
"வெளிநாட்டுக்கு போறதுக்கு எவ்வளவு செலவு செஞ்சிங்க"
"80 ஆயிரம்ங்க. அதுவும் மாமியார் தான் வட்டிக்கு வாங்கி அனுப்பி வைக்கறாங்க"
"இந்த 80 ஆயிரத்தை வைத்து நிங்க சீர்காழியிலே ஒரு சப்பாடுகடை போட்டுருக்கலாமே"
மாமியா விருப்பபட்டுட்டா! அதனால வெளிநாட்டுக்கு போறேன்.
"புருனேல உங்களுக்கு எவ்வளவு சம்பளம்"
"15 ஆயிரம், தங்கற செலவு நம்மோடது"
"புர்னே ஏர்போட்டிற்கு யாராவது உங்களை கூப்பிட வருவார்களா?"
"எங்க கடை ஓனர் வருவார்"
"அவருக்கு நீங்க விமானத்தை தவற விட்டது தெரியாதே. அவருக்கு தகவல் சொல்ல வேண்டும். அவருடைய போன் நம்பர் இருக்குதா?"
 
ஒரு டைரியில் இருந்த நம்பரை காண்பித்தார். பக்கத்தில ஒரு தகவல் நிலையம் இருந்தது. அங்கு போய் புருனேக்கு ஒரு போன் செய்யவேண்டும். பக்கத்தில் எங்காவது போன் செய்யகூடிய இடம் இருக்கின்றதா என்று கேட்டேன். பக்கத்திலே கால் அண்ட் பெய்டு சிஸ்டம்(நம்ம ஊர் டெலிபோன் பூத்) இருக்கின்றது என்றார்கள். அங்கு சென்று காலியாக இருந்த ஒரு பூத்தில் நுளைந்து புருனேக்கு டயல் செய்தேன். எதிர் பக்கமிருந்து  ஹலோ என்ற குரல் கேட்டது. சிங்கப்பூர் ஏர்போட்டில் இருந்து பேசுகின்றேன். உங்க ஊர்காரர் விமானத்தை தவற விட்டுவிட்டார் என்றேன். அவர் எப்படி தவற விடலாம் என்று கேட்டார். சுரீர் என்று கோபம் வந்தது. அவர் தவற விட்டுவிடார். அடுத்த விமானத்தில் வருவார். ஏர்போர்ட் போய் கூட்டி செல்லுங்கள் என்று விமான நேரம் சொல்லிவிட்டு, ரிசிவரை நண்பரிடம் கொடுத்துவிட்டு பூத்தை விட்டு வெளியே வந்தேன்.
 
எப்படி தவற விட்டான் என்று கேட்டால் பதில் சொல்லலாம். எப்படி தவற விடாலாம் என்பவனிடம் என்ன பேசுவது. உள்ளே அவர் போனில் விளக்கம் சொல்வது தெளிவாக வெளியே கேட்டது. போன் செய்து முடிந்ததும் அங்கிருந்த பெண்ணிடம் என்னிடம் இருந்த அமெரிக்கன் டாலரை கொடுத்து போன் பில் கட்டிய பிறகு மீதி பணத்தை சிங்கப்பூர் டாலராக கொடுத்தாள். அதனை வாங்கி நண்பரின் மேல் சட்டை பையில் வைத்தேன். ஒரு வேளை உங்கள் ஓனர் வரவில்லை என்றால் இந்த பணம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறிவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்து உடகார்ந்தோம்.
 
என்ன நினைத்துக்கொண்டு வந்தாரோ தெரியவில்லை திடீரென்று கேவி கேவி அழ ஆரம்பித்துவிடார். ஊர் பேர் தெரியாத இடத்தில் வந்து பாசை தெரியாம மாட்டிக்கிட்டோமே என்றா அல்லது வீடு வாசல் எல்லாம் விட்டு அநாதை போல் வேறு நாட்டுக்கு போகின்றோமே என்றா தெரியவில்லை. அவர் அழ ஆரம்பித்தது எனக்கு தர்ம சங்கடமாக  இருந்தது. அவரை சமாதான படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
 
மணி 11 . மீண்டும் கவுண்டருக்கு போனோம். அங்கு இருந்தவன் சீட் இருக்கின்றது. ஆனால் பணம் கட்டவேண்டும் என்றான். அவரிடம் பணம் ஏதும் இல்லை. நான் கூட அவருக்கு உதவி செய்ய தான் வந்திருக்கின்றேன். என்னிடமும் பணம் இல்லை. அதனால் பணம் கட்ட இயலாது. தயவு செய்து பணம் இல்லாமல் அவருக்கு ஏற்பாடு செய்து கொடு என்று அவனிடம் நிலைமையை விளக்கி சொன்னேன். அவன் போய் அவனுடைய அதிகாரியிடம் பேசிவிட்டு வந்தது சரி பணம் கட்ட தேவையில்ல என்று சொல்லி சீட் போட்டு கொடுத்தான்.
போர்டிங் பாஸ் வாங்கி கொண்டு அவருடைய கேட்டுக்கு எப்படி போக வேண்டும் என்று வழி சொல்லிவிட்டு போய்விடுவீர்களா என்று கேட்டேன். போய்விடுவேன் என்று சொல்லி அரைகுறையாக தலையை அசைத்தார். எனக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது. சரி நானே கொண்டு போய் விடுகின்றேன் என்று கூறி அழைத்துக்கொண்டு அவருடைய கேட் வாசலில் கொண்டு விட்டேன். கைகளை பிடுத்துக் கொண்டு மறக்க மாட்டேன் என்றார். எனக்கு நேரம் ஆகின்றது நான் வருகின்றேன் என்று மீண்டும் அதற்கு எதிர் திசையில் தொலைவில் இருந்த என்னுடைய கேட்டுக்கு அறைகுறை ஓட்டமாக வந்தேன்.
 
கேட் மூட இன்னும் 15 நிமிடம் இருந்தது. எப்பொழுதும் கேட்டிற்குள் செல்வதற்கு முன்னர் நான் ஏறுவதற்கு உரிய விமானம் தான் இங்கு இருக்கின்றதா என்று பார்த்துவிடுவது வழக்கம். அப்படி பார்த்தால்... திடுக் என்றது ... வேறு ஊருக்கு செல்லும் விமானத்திற்கு உரிய கேட் இது. எங்கயோ தப்பு நடந்திடுச்சி... சென்னையில இருந்து இறங்கியதும் பார்த்தேன். அதற்கு பின்னர் அவர் முதன் முதலில் டிரான்சிட் கவுண்டருக்கு கூட்டிக்கொண்டு சொல்லும் பொழுதும் பார்த்தேன். இந்த கேட் தான் போட்டிருந்தது. நடுவில் அவரோட பேசி கொண்டிருந்த நேரத்துல கேட் மாறியதை கவனிக்கவில்லை. விமான அட்டவணை போட்டிருக்கும் டிஸ்பிலே தேடி புயல் வேகத்துல ஓடினேன். ஒருத்தருக்கு உதவ போய் நாம மாட்டிக்கிட்டோமே என்று மனம் யோசிக்க ஆரம்பித்தது. டிஸ்பிலேயில் போய் பார்த்தல் நண்பரை எங்கு கொண்டு போய் விட்டானோ அதற்கு அடுத்த கேட் என்று போட்டிருந்தது.  அது ஒரு வாங்கல் தூரம் இருந்தது.
 
இன்னும் கேட் மூட 10 நிமிடங்கள் இருந்தது. அங்கிருந்து எடுத்த ஓட்டம் தான். ஆள் இல்லாத இடத்தில் முழு ஓட்டமாகவும் ஆள் இருக்கும் இடத்தில் முக்கால் ஓட்டமுமாக சென்றேன். போகும் வழியில் பல வித நினைவுகள் மனதில் வந்தது. உடம்புக்கு ஒரு வேலையை கொடுத்துவிடால் மனது என்ன வேண்டும் என்றாலும் அதுபாட்டுக்கு யோசிக்க ஆரம்பிக்கும். அது போலதான் அன்றும். உடம்பு அறைகுறை ஓட்டத்திலே இருந்தது,மனம் பலவற்றையும் யோசிக்க ஆரம்பித்தது. விமானத்தை தவற விடால் என்ன செய்வது. அந்த டிரான்சிட்காரன் முகத்துல போய் முழிக்க கூட முடியாதே. லேட் ஆச்சின்னா 10 நிமிடம் தாமதிப்பான் அதுக்கப்புறம் ஏற்றிய பொட்டிய எடுத்து கடாசிட்டு பறந்திடுவான்.
 
 
வழியில் நண்பருடைய கேட்டை தாண்டி செல்லும்பொழுது அந்த வேகத்திலும் உள்ளே பார்த்துக்கொண்டு சென்றேன். கேட் முடியிருந்தது. அவர் பத்திரமாக புறப்பட்டிருப்பார் என்ற எண்ணம் அந்த ஓட்டத்திலும் வந்தது. என்னுடைய விமானத்திற்கான கேட் இன்னும் திறந்திருந்தது. உள்ளே சோதனை செய்பவர்களை தவிர  யாரும் இல்லை. அவசர அவசரமாக  சோதனை முடித்து விமானத்தின் வாயிலுக்கு நடந்ததேன். வாயில் காப்போன் மாதிரி இரண்டு பேர் நின்று வெல்கம் என்றார்கள் அவர்கள் முகமோ உனக்காக காத்திருக்கின்றோம் என்பது போன்றிருந்தது. எந்த பக்கமாக என்னுடைய இருக்கைக்கு செல்ல வேண்டும் என்று வழிகாட்டினார்கள். அந்த பக்கமாக நடக்க ஆரம்பிக்கும் பொழுதே விமானத்தின் கதவை அடைக்கும் சத்தங்க்கள் கேட்க ஆரம்பித்தது. நான் தான் கடைசி பயணி போலும். என்னுடைய இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
 
விமானம் கேட்டில் இருந்து புறப்பட ஆரம்பித்தது. அப்பொழுது தான் அவரோட புருனே தொலைபேசி என்னை குறித்து வைக்காமல் போனது நினைவுக்கு வந்தது. அவர் ஓனர் கூப்பிட வருவாரோ மாட்டாரா என்ற எண்ணம் வந்தது. 80 ஆயிரம் செலவு செய்து வெளிநாட்டுக்கு போகின்றவர் உள்ளூரிலே அதனை வைத்து கொஞ்சம் பெரிய கடையாக போட்டிருந்தால் இப்படி கஸ்டப்பட வேண்டிய வேலை இருக்காதே என்ற எண்ணமும் வந்தது. மாசம் 15 ஆயிரம் சம்பளம் வாங்கி, தங்குகின்ற செலவு போக இவர் அனுப்புகின்ற காசை வைத்து கடனை அடைக்க வேண்டும். எப்படியும் கடன் அடைய 1 வருடத்திற்கும் மேல் ஆகும். அதற்கு பின்னர் தான் அவர் சேர்க்க வேண்டும். ஊருக்கு திரும்ப எப்படியும் 2 அல்லது மூன்று வருடங்கள் ஆகிவிடும் என்று நினைவு ஓடி ஆயாசப்படுத்தியது. பிஸினஸ் கிளாசில் சீட் போட்டாவது அனுப்புங்கள் என்று சொல்லியும் எக்கனாமிக் கிளாசில் சீட் போட்டு 6 மணி நேரம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்தது இப்படி ஒருவருக்கு உதவி செய்யதான் போலும் என்ற எண்ணம் தோன்றியது. விமானம் ரன்வேயில் ஓடி மூக்கை தூக்கி பறக்க ஆரம்பித்தது.

Thursday, September 19, 2013

காண்டா விளக்கு 1.0

எல்லோருக்குமே நிறைய அனுபவங்கள் இருக்கும். நிறைய மனிதர்களை சந்தித்திருப்பார்கள்.  ஆனால் காலப்போக்கில் அந்த அனுபவங்களையோ அல்லது நாம் சந்தித்த மனிதர்களையோ மறந்து விடுவோம். சில அனுபவங்கள் மறக்கப்படுவதே சிறந்தது. சில அனுபவங்கள் நினைத்து பார்க்கும்பொழுதே நம்முள் ஒரு மகிழ்ச்சியை அல்லது நெகிழ்ச்சியை கொடுக்கும். சில அனுபவங்கள் நமக்கு நல்ல ஒரு பாடத்தை கற்றுகொடுத்திருக்கும். அப்படிபட்ட சிலவற்றை காண்டா விளக்கு என்ற தலைப்பில் இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
        
 
2006 ஆம் ஆண்டில் இதே அலுவலகத்தின் சென்னை கிளையில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது சில உதவிகளுக்காக ஆண்டின் தொடக்கத்திலும் மத்தியிலும் தைவான் வந்து சென்றேன். ஒருநாள் என்னுடைய துறை தலைவர், உன்னை மறுபடியும் தைவானுக்கு ஒரு வாரம் கூப்பிடுகின்றார்கள். அதுவும் இன்றே அனுப்ப முடியுமா என்று கேட்கின்றார்கள் என்று சொன்னார். அப்பொழுது என்னிடம் பல்நுழைவு கடவு சீட்டு இருந்ததால் எப்போ சொல்கின்றீர்களோ அப்பொழுது புறப்படுகின்றேன் என்றேன். அவரும் நாளைக்கு இரவு கிளப்புவதற்கு உன்னை தயார் செய்து கொள் என்று கூறினார்.
 
சென்னை டு சிங்கப்பூர். சிங்கப்பூர் டு தைவான் செல்லவேண்டும். எப்பொழுதுமே சிங்கப்பூரில் 2 மணி நேரத்திலே அடுத்த விமானம் ஏறுவது போன்று பயணச்சீட்டு கொடுப்பார்கள். இந்த முறை அவசரமாக புறப்பட்டதால் காலை சிங்கப்பூர் டு தைவான் விமானத்தில் இருக்கை கிடைக்கவில்லை. மதியம் 12:20 மணிக்கு புறப்படுகின்ற விமானத்தில் தான் இருக்கை கிடைத்தது. அலுவலக நண்பர்கள் நீ வந்து சில வேலைகள் செய்த பின்னர் தான் கிளையண்டின் வெள்ளிகிழமை பேக்எண்டு வேலையை முடிப்பதாக முடிவு செய்திருக்கின்றோம் என்று சொல்லிவிட்டார்கள். சனிகிழமை தைவான் வந்ததும் வேலை முடியும் வரை எனக்கு ஒய்வு எடுக்க கூட நேரம் இருக்காது. அதனால் சிங்கப்பூரில் ஒய்வு எடுக்க ஏதேனும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டதற்கு சிங்கப்பூரில் லவுஞ்சில் சென்று கேள் கொடுப்பார்கள் என்று கூறிவிட்டார்கள். நானும் வழக்கம் போல் தலையாட்டிவிட்டு சென்னையிலிருந்த்து விமானம் ஏறி சிங்கப்பூர் வந்தாகிவிட்டது.
 
 
சிங்கப்பூரில் லவுஞ்சில் சென்று தங்க இடம் கேட்டாள்  அங்கிருந்த பெண்மணி முதலில் உன்னுடைய பயணச்சீட்டை காண்பி என்றார்.  பயணச்சீட்டை பார்த்ததும் இது எக்கானாமிக் வகுப்பு பயணச்சீட்டு இங்கு அனுமதி கிடையாது என்று கூறி விட்டார். இரவு முழுவதும் விமானத்தில் அரை குறையான தூக்கம். தூக்க சடவு வேறு கண்களை அழுத்த ஆரம்பித்தது. இனி இந்த அம்மிணியிடம்  பேசி பயனில்லை என்று லவுஞ்சை விட்டு கீழே வந்தால் நிறைய பயனிகள் சேரில் உட்கார்ந்து மற்றும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் உடகார்ந்து எதிர்த்தாப்போல் கை பெட்டியை வைத்து அதன் மீது கால்களை தூக்கி வைத்து துங்க ஆரம்பித்தேன்.
 
 
ஏதோ ஒரு உள்வுணர்வு என்று தான் சொல்லவேண்டும். திடீரென்று முளிப்பு வந்தது. தலை சேரின் முதுகு தாங்கியின் விளிம்பில் வைத்து வானம் பார்த்து இருந்தது. கண்களை திறந்தால் அருகில் என்னையே பார்த்துக்கொண்டு சுமார் 40 வயது மதிக்க தக்க ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஒல்லியான தேகம். ஒட்டி இடுக்கிய கன்னங்கள். கொஞ்சமாக குழி விழுந்த கண்கள். வெள்ளை நிறத்தில் வேட்டி சட்டை அணிந்திருந்தார். கைகளில் ஒரு சிறிய கவர். அதில அவருடைய பயணத்துக்கான ஆவணங்கள் இருக்க வேண்டும்.
கண்களை திறந்ததும் என்னைபார்த்து நீங்கள் தமிழா என்று கேட்டார். ஆமாம் என்றதும். நான் விமானம் தவறவிட்டுவிட்டேன் இங்கு என்ன பேசுகின்றார்கள் என்று எனக்கு புரியவில்லை. கொஞ்சம் உதவி செய்யுங்கள் என்று சொன்னார். முதலில் இது ஏதடா வம்பாய் போய்விட்டது என்று மனம் நினைத்தது. யாரு என்னன்னு தெரியாம உதவி செய்ய போய் மாட்டிக்கிட்டா என்ன செய்வது என்றும் நினைப்பில் ஓடியது. இருந்தாலும் என்ன நடந்தது என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்  என்றேன்.
 
அவர் சொன்னதன் சாராம்சம் இது தான். "நான் புரூனே செல்வதற்காக நேற்று இரவு சென்னையில் விமானம் ஏறினேன். விமானம் முதலில் கொழும்பு சென்றது. அங்கு வேறு ஒரு விமானம் ஏற்றி விட்டார்கள். நான் விமானத்தில் துங்கி விட்டேன். என்னை விமான பணிப்பெண் எழுப்பி நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது இறங்குங்கள் என்று இறக்கிவிட்டு விட்டார்கள். இடம் தெரியாமல் அலைந்ததில் புருனே செல்லும் விமானத்தை விட்டுவிட்டேன். கொஞ்சம் கேட்டு  சொல்லுங்கள் என்றார்". மேலும் சில கேள்விகள் கேட்டும் அவருடைய பயனச் சீட்டை வாங்கி பார்த்தும் நான் புரிந்து கொண்டது சென்னை டு கொழும்பு - ஸ்ரீலங்கா விமானம், கொழும்பு டு மலேசியா வழி சிங்கப்பூர் - ஸ்ரீலங்கா விமானம், சிங்கபூர் டு புருனே சிங்கப்பூர் விமானம். அதில்  நண்பர்(பெயர் நினைவில் இல்லை அதனால் இனி அவரை நண்பர் என்றே அழைக்கலாம்) நன்றாக தூங்கிவிட்டாதால் சிங்கப்பூரில் இறங்க தாமதமாகிவிட்டது. இறங்கிய பின்னரும் எப்படி அடுத்த கேட் செல்வது என்பதில் எற்பட்ட தாமதம் வேறு. அதனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரம் கழித்தே கேட்டுக்கு சென்றிருக்கின்றார்.
 
சரி என்னுடன் வாங்க என்று அவரை அழைத்துக்கொண்டு மாற்றுபதிவு (Transit counter) கவுண்டர் சென்று விசாரித்தேன். அங்கிருந்தவரோ தான் ஏற்கெனவே அவரிடம் எல்லாம் கூறிவிட்டேனே  என்று சொன்னார். அவருக்கு ஆங்கிலம் புரியாது. மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் என்று சொன்னேன். அடுத்த விமானம் காலை 11:45 மணிக்கு. 11 மணிக்கு இங்கு மீண்டும் வந்தால் ஏதாவது இருக்கை காலியாக இருந்தால் அவருக்கு ஏற்பாடு செய்கின்றேன் என்றார். தேவைபட்டால் பணம் கட்ட வேண்டியது இருக்கும் என்றார். மணியை பார்த்தால் காலை சுமார் 9 மணி 45 நிமிடம் இருக்கும். மீண்டும் முதலில் இருந்த இருக்கை பகுதிக்கே வந்து உட்கார்ந்தோம். நண்பரிடம் 11 மணிக்கு நம்மை வரச்சொல்கின்றார், வேறு விமானம் மாற வேண்டியது இருப்பதால் அதுவும் தவறு உங்கள் மீது இருப்பதால் கூடுதலாக கொஞ்சம் பணம் கட்ட வேண்டும் என்று சொல்கின்றார். எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரியவில்லை. பணம் ஏதும் வைத்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். இதனை வைத்துகொண்டு எப்படியாவது உதவி செய்யுங்கள் என்று அவருடைய வலது கையை விரித்தார். 100 ரூபாய் காந்தி நோட்டு ஒன்று அவர் கைகளில் சுருண்டு இருந்தது.
 
                                                                                                                   ....தொடரும்....