Monday, December 15, 2014

திருகார்த்திகை தீபம்

  தென் தமிழகத்தில் திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும். முதலாவது கொழுக்கட்டை அதுவும் பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை. இரண்டாவது வீட்டை சுற்றி விளக்கு வைப்பது. கொஞ்சம் விடலை பசங்க இருந்தா மூன்றாவதாக சொக்க பனை.



  திருகார்த்திகை அன்று காலையில் எழுந்ததும் நமக்கு கொடுக்கிற முக்கியமான வேலையே எங்கேயாவது இரண்டு சருவை பனை ஓலை வாங்கிட்டு வந்துரு என்பது தான். ஒரு சருவை ஓலை என்பது ஒரு பனை மட்டையில் உள்ள ஓலையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு. இரண்டு சருவை ஓலை என்றால் கிட்ட தட்ட முக்கால்வாசி ஓலை. ஆனால் ஒரே மட்டையில் இரண்டு சருவை ஓலையை வெட்டமாட்டார்கள். முத்தின ஓலையில் கொழுக்கட்டை செய்தால் கொழுக்கட்டையில் இலைவாசம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் குருத்தோலை அல்லது சமீபத்தில் வெளிவந்த ஓலை தான் வெட்ட வேண்டும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாம 4 ஓலை தான் தேரும். அதற்கு மேல் வெட்டினால் அது மரத்தை மொட்டை அடிப்பதற்கு சமம்

  எங்கள் ஊரில் அப்பாவும் பிள்ளையுமாக இரண்டு பேர்தான் பனையேருவார்கள். காத்தாலே அவங்க வீட்டுக்கு போய் அம்மா சருவை ஓலை கேட்டார்கள் என்று கேட்டால், தம்பி நீங்க சாயங்காலம் 3 மணிக்கு வாங்க அப்போ தான் ஓலை வெட்ட போவேன் என்று சொல்வார். எனக்கு இரண்டு சருவை ஓலை வேண்டும் என்று சொன்னால் எல்லோரும் கேக்கறாங்க, மரத்துல இருக்குறத தான் தரமுடியும். வாங்க பாப்போம் என்று பொடிமட்டையிலிருந்து கொஞ்சம் பொடியை எடுத்து பல்லில் தேய்த்தவாரே சொல்வார்.

  நான் படித்தது கிருஸ்தவ பள்ளிக்கூடம் என்றாலும் திருகார்த்திகைக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை விட்டுவிடுவார்கள். பள்ளியிலிருந்து சைக்கிளை மிதித்தால் நேரே அவரோட வீட்டில் தான் போய் நிற்கும். ஏற்கெனவே அங்கு பத்துக்கும் மேல் ஆட்கள் நிற்பார்கள். எங்க ஊரில் சர்கார் பனை மரங்கள் கொஞ்சம் உண்டு. அங்க போய் எந்த எந்த மரத்தில் வெட்டலாம் என்று முதலிலே கணக்கு பண்ணி ஒரு மரத்தில் ஏறுவார். நாங்கெல்லாம் பனை மரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி நின்று எப்போடா ஓலைய போடுவாரு என்று பாத்துக்கொண்டிருப்போம். அவர் மெதுவா மேலே ஏறி வாகா ஒரு மட்டைய புடிச்சி உச்சானிக்கு போய் நின்னுபார். அதுக்கப்புறம் எந்த ஓலைய அறுக்கலாம் என்று நோட்டம் விட்டு, காலை மற்றி மாற்றி ஒவ்வொரு மட்டையா தாண்டி ஓலை அறுக்கும் மட்டை கிட்ட வந்து எவ்வளவு வெட்டலாம் என்று பார்த்து தன்னிடம் இருக்கும் பாலை அரிவாளால் வாகா மேல வச்சி கீழ் நோக்கி லேசா ஒரு இழுப்பு இழுப்பார். ஒரு சருவை ஓலை சட்டுன்னு கீழ் நோக்கி வரும். அது கீழே விழுந்ததும் ஓடிப்போய் எடுத்துக்கிடனும். கொஞ்சம் பிந்தினாலும் அடுத்த ஆள் எடுத்துப்பாங்க. நானெல்லாம் எப்போ குருத்தோலைய வெட்டி போடுவாருன்னு பார்த்திக்கிட்டு நிப்பேன். அவர் குருத்தோலைய வெட்டுறது தெரிஞ்ச உடனே ஓடுறதுக்கு ரெடியா நின்னுப்பேன். அத மட்டும் கைல எடுத்து போடுவாரு. அண்ணா இந்த பக்கம் போடுங்க என்று சின்னதா ஒரு சத்தம் குடுத்தா சில நேரம் நம்மை நோக்கி வரும். நமக்கு வேண்டிய ஓலை கிடைத்ததும் அந்த இடத்தை காலிசெஞ்சிடனும்.

  ஓலைய கொடுத்தஉடனே நம்மள அத்தோட விடுவாங்களா என்றால் அது தான் கிடையாது. இதை கொஞ்சம் வெட்டி கொடுத்திட்டுபோ என்பார்கள். ஓலைய ஏடு பிரித்து (இரண்டு இலைகள் சேர்ந்து நீளமாக இருப்பது) முக்கால் அடி நீளத்துக்கு ஒரு தூண்டாக நறுக்கனும். நீளமான ஏட்டில் இரண்டு துண்டுகள் வரைக்கும் நறுக்கலாம். இல்லை என்றால் ஒன்று மட்டுமே. ஓலை கிழிந்துவிடாமல் கவனமாக வெட்டனும். மீதி இருக்குற கழிவு ஏட்டில் இருந்து கட்டுவதற்காக நூல் மாதிரி கிழித்து வைக்கனும்.

  பச்சரிசியை நனையவச்சி இடிச்சி பெருங்கண் சல்லடையாள் (மாவு பரபரன்னு இருக்கும்) சலிச்சி வச்சிக்கனும். கிராமங்களில் கொழுக்கட்டை முன்றுவித சுவைகளில் செய்வார்கள். சர்க்கரையில் (அச்சுவெல்லம்) செய்த கொழுக்கட்டை கொஞ்சம் வெளீரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். சீனியில் செய்த கொழுக்கட்டை வெண்மையாக இருக்கும். கருப்பட்டியில் செய்தது கொஞ்சம் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். மூன்றின் சுவையும் வெவ்வேறானவை. இதற்கு மேலும் சுவைக்காக தேங்காய்பூ, சிறுபயத்தம் பருப்பு, ஏலக்காய் எல்லாம் சேர்துக்கலாம். இடித்தமாவோடு தேங்காய்ப்பூ, பயத்தம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அதோடு சீனி, சர்க்கரை, கருப்பட்டியை தனித்தனியாக விரசி (கலந்து) கெட்டியா வச்சிப்பாங்க. கொஞ்சம் மாவு கலவையை எடுத்து நறுக்கி வைத்த பனை ஏட்டில் சரியாக மத்தியில் வைச்சி, இன்னொரு இலையால் மூடனும். மூடினதும் நூல் போல் கிழித்துவைத்திருந்த பனை இலக்கை (ஒலை) வைத்து கட்டி தனியாக வைக்கனும். இதுல கொஞ்சம் டெக்னிக்கல் விசயம் எல்லாம் இருக்கு. மாவுக்கலவையில் நிறைய நீர் விடக்கூடாது. அடுத்து ஓலையில் மாவும் நிறைய வைக்க கூடாது. கட்டிய ஓலையை நீராவியில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனுளிருக்கும் சர்க்கரை, சீனி, கருப்பட்டி மூன்றும் உருக ஆரம்பிக்கும் அப்பொழுது மாவோடு சேர்ந்து இரண்டு பக்கமும் சிறிது தூரம் ஓடும். அதிகமான மாவும், அதிகமான தண்ணீரும் மாவை ஓலையை விட்டு வெளியே தள்ளிவிடும். மாவு வைத்து கொடுக்கும் வேலைக்கு என்னைய கூப்பிட மாட்டாங்க. நமக்கு கையும் வாயும் சும்மா இருக்காது. வச்சிமுடிக்கிறதுக்குள்ள கால்வாசி மாவு காணாம போய்டும். எனக்கு கொடுக்குற டிபார்ட்மெண்ட், மாவு ஓலைய இன்னொரு ஒலைய வச்சி மூடி கட்டு போடறது தான். எல்லா ஓலையையும் வச்சி கட்டி முடிச்சதும் மீதி ஏதாவது மாவு இருந்தா அதில் மா(வு)விளக்கு வைப்பார்கள்.


  இரண்டடி  உயரம் உள்ள ஒரு பானைய எடுத்து அதுக்குள்ள வைக்கிற கொழுக்கட்டை ஓலை கீழே இறங்காம இருக்க கால்வாசி பானையில சிறிய கம்பு வைத்து ஊடுகட்டி, அதுக்குள்ள நறுக்கி உபயோகமில்லாமல் போன ஓலைய போட்டு பரப்பி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொழுக்கட்டை ஓலைய அடுக்கி வச்சி துணிய வச்சி வண்டுகட்டி அதுக்கு மேல ஒரு மூடிய போட்டு அடுப்பில் வச்சிட்டா, நீராவியிலே வெந்துடும். வெந்ததும் ஓலைய பிரிச்சி கொழுக்கட்டைய உடைஞ்சிடாம தனியா எடுத்து ஒரு தட்டில் வச்சி முதல்ல சாமிக்கும், பிறகு முன்னோருக்கும் படச்சிட்டு, ஆசாமிகிட்ட நீட்டுனா உடனே காலியாயிடும். பொதுவா கொழுக்கட்டைய அடுத்தநாள் சாப்பிட்டா சுவை அதிகமா இருக்கும்.

 இந்த வேலை நடந்துக்கிட்டு இருக்குறப்பவே, இன்னொருபக்கமாக வீட்டை அலங்காரம் செய்யும் வேலையும் நடக்கும். வேற ஒன்னும் இல்ல வீட்டுக்குள்ள அங்க அங்க மாக்கோலம் போட்டு வைப்பாங்க. இந்த மாக்கோலம் போடுறது கூட ஒரு கலை தான். பச்சரிசிய ஊறவச்சி அம்மியில மை போல அரைக்கனும் கூடவே கொஞ்சம் மஞ்சளும், நிறத்திற்காக. மை போல அரச்ச அரிசியில நீர் சேர்த்து கொஞ்சம் கட்டியாவும் கட்டியா இல்லாத மாதிரியும் கலக்கி வச்சிக்குவாங்க. சிறிய வெள்ளை துணியை எடுத்து இந்த கலவையில முக்கி பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பிடித்து கோலம் போடனும். இந்த கோலம் ஒரு ரெண்டு வாரத்துக்கும் மேலே அழியாம இருக்கும். அதுக்கு அப்புறமும் கோலம் போட்ட தடம் அந்த இடத்தில் இருக்கும். அடுத்து பப்பாளி மரத்தில் இருந்து நல்ல இளம் பிச்சி இலையா ஒரு இலைய பறிச்சி இலையும் காம்பும் சேரும் இடத்துல சின்ன அளவு வட்டமா வெட்டிக்கிட்டு, நரம்பு தவிர உள்ள இருக்குற பச்சை இலையை வெட்டி எடுத்துக்கணும். இது எதுக்குன்னு கேக்கறியலா, இத அப்படியே அந்த கலைவையில தொட்டு கதவில் ஒரு அமுத்து அமுத்தி எடுத்தா கதவில் ஒரு நட்சத்திரம் இருக்குற மாதிரி தெரியும். அதுக்கு நடுவுல ஒரு குங்கும பொட்டு. இப்படி கதவுல நல்லா இடம் விட்டு வச்சா பார்க்க அழகா இருக்கும். எங்க வீட்டுல எல்லா கதவையும் இந்த மாதிரி அலங்காரம் செய்யவேண்டியது என்வேலை. கதவு நிலைக்கு எங்க அம்மா கையில மாவை எடுத்து ஒரு பட்டை போடுவாங்க அதுக்கு நடுவுல நான் ஒரு குங்கும பொட்டை வைக்கனும் அவளோ தான். இது முடிஞ்சதும் முன்வாசல், வராண்டா, தார்சா என்று எல்லா இடத்திலும் அகல் விளக்கு (மெழுகுவர்த்தி) பொருத்தி வச்சிட்டா கார்த்திகை தீப அலங்காரம் முடிஞ்சிது.

அடுத்தது சொக்கப்பனை. நல்லா இருட்டுனதும் ஊருல இருக்குற கோவிலுக்கு முன்னாடி சொக்க பனை ஏத்தனும். ஒரு 8 அடி நீளமான கம்பு அல்லது தென்னம்மட்டைய ஒலை இல்லாம எடுத்துக்கனும். காய்ந்த பனை ஓலைய கொய்து (சின்ன சின்னதா நீளவாக்கில்) வச்சிக்கனும். இப்போ பனை ஒலையை தென்னமட்டையில வச்சி கட்டணும். முதல் கட்டு உச்சியில வச்சி கட்டணும். அடுத்த கெட்டு அதுக்கு அடியில வச்சி கெட்டனும். கிட்ட தட்ட பூ இதழ் இருக்குமே அதுமாதிரி ஒரு ஒரு வட்டமா வச்சி கீழ ஒரு 2 அடி இடம் விட்டுட்டு கட்டணும். அப்படி கட்டும் போது நடு நடுவுல சில்லாட்டைய (பனை மட்டையின் கீழ் வலை போன்று மரத்தை கவ்வி பிடிக்க இருக்கும் ஒரு அமைப்பு) வச்சிக்கனும் கூடவே கொஞ்சம் உப்பு. இதை ரொம்ப இருக்கி கெட்ட கூடாது. கட்டுன மாதிரியும் இருக்கனும், கட்டாத மாதிரியும் இருக்கனும். இத எங்கூரு பிள்ளையார் கோவில் முன்னாடி சின்னதா குழி தோண்டி நிக்கவைக்சிர வேண்டியதுதான். 7 மணிக்கு கோவில் பூசை முடிஞ்சதும் பூசாரி ஒரு கற்பூரத்தை கொளுத்தி நீட்டுவார், அதுல இன்னொரு ஓலைய (கைப்பந்தம்) நீட்டி தீ வாங்கி அப்படியே நட்டு வச்சிருக்க சொக்க பனையின் மேல் பாகத்தில் (உச்சியில) நெருப்ப வச்சிடனும். மெதுவா எரிஞ்சிகிட்டே வரும். நாம் உப்பு போட்டு வச்சிருப்போமே அங்க வந்ததும் இந்த உப்பு  எல்லாம் வெடிக்க ஆரம்பிக்கும் அது வெடிக்கும் போது இதுவரைக்கும் எரிஞ்சி கனகனன்னு இருக்கும் ஒலை எல்லாம் நெருப்பு பொரியா பறக்கும். அடுத்து சில்லாட்டை வர்ர இடமும் அப்படி நெருப்பு பொரி பறக்கும். கும்மிருட்டுள சொக்கபனை மட்டும் எரியும் அப்போ அப்போ நெருப்பு பொரி (புஸ்வானம்) பறக்கும். பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். சின்ன பசங்க எல்லாம் கார்த்திகை மாசம் சிவ்வோடோ சிவ்வன்னு சத்தம் போடுவாங்க. இந்த சிவ்வக்கு என்ன அர்த்தமின்னு என்ன கேட்டுறாதீங்க. எனக்கும் இதுவரைக்கும் அர்த்தம் தெரியாது.


எங்க தாத்தா-பூட்டன் காலத்துல பாதி பனைமரத்த வெட்டி வச்சி எரிப்பாங்களாம், ராத்திரி பூரா நின்னு எரியுமாம். இப்படி பனைய வெட்டி எரிச்சதால இதற்கு பெயர் சொக்கபனை. சொக்கன் பனை என்பது மருவி சொக்கப்பனை ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கு. என்னோட சின்ன வயசுல பனைக்கு பதிலா பனை ஓலை வச்சி கொளுத்துனோம். இப்போ ஒரு பனை இலைக்கை (ஓலையில் ஒரு இலை) கூட கொழுத்த முடியாது. ஏன்னா இப்போ பனைமரமே இல்லப்பா!



குறிப்பு : அடுத்தநாள் காலையிலே கொழுக்கட்டை பரிமாற்றங்கள் வேறு நடக்கும். சுற்றத்தார் வீட்டுக்கு கொடுக்குறதும் அவங்க நமக்கு கொடுக்கறதும், ஏன் இவங்க வீட்டுல கொலுக்கட்ட இவ்வளவு சின்னதா இருக்கு, ஏன் இனிப்பே இல்லை, ஏன் இவ்ளோ இனிப்பு போட்டுருக்காங்க, இந்த கொழுக்கட்டைய கடிக்க முடியலேயேபல்லு போய்டும் போல இருக்கு என்று எல்லார் வீட்டிலும் அங்கலாச்சிக்குவாங்க. அது ஒரு தனிக்கதை.

படங்கள் உதவி : கூகுளாண்டவர்

Monday, May 12, 2014

க்லீன் இந்தியா - The pissing Tanker

ஒரு சில நாட்களாக The pissing Tanker அப்படின்னு ஒரு யூடியூப் லிங் ஒன்று முகப்புத்தகத்தில் உலா வருகின்றது. ஒரு லாரி நிறைய தண்ணீர் நிரப்பிக்கொண்டு யாரவது பாதை ஓரத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தால் அவர்கள் மேல் தண்ணீரை பீச்சி அடித்து நனையவைத்துக் படமாக்கி யூடியூப்பிலும் பதிவேற்றியிருந்தார்கள். அதனை நிறைய பேர் முகப்புத்தகத்திலும் பகிர்ந்தார்கள். அவர்கள் என்ன நினைத்து லைக் அல்லது பகிர்ந்தார்கள் என்று எனக்கு புரியவில்லை. அதை பார்த்ததும் ஒரு சில விசயங்களை சொல்ல கை பரபரத்தது. அப்புறம் வேண்டாம் என்று முடிவுசெய்து தட்டச்சி செய்ததை அழித்தும் விட்டேன்.

ஆனால் இன்று அதனை மீண்டும் தட்டச்சு செய்யும் சூழ்நிலை வந்துவிட்டது. ஒரு சிறிய விசயத்திற்காக தைபேயில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். காத்திருக்கும் இடத்தில் ஒரு பெரிய டீவியில் TTV செய்தி ஓடிக்கொண்டிருந்தது. சரியா 9:35 ஆவது நிமிடத்தில் அந்த யூடிப்பை அப்படியே ஒளி பரப்பினார்கள். காத்திருக்கும் இடத்தில் ஒரு 20 பேராவது இருந்திருப்போம். அந்த யூடியூப் படம் முடியும் வரைக்கும் தலை கவிழ்ந்தே இருந்தேன். உண்மையாகவே சிறுநீர் கழித்து தண்ணீரால் அடிவாங்கியவனை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது. அதனை படம் எடுத்து யூடியூப்பில் வெளியிட்டவனை நினைத்து எரிச்சல்/கோபம் எல்லாம் வந்தது.

"க்லீன் இந்தியா" இதுதான் அவர்களோட கோசம். நீ ஒன்னுக்கு அடிச்சா, நான் தண்ணீர் அடிப்பேன். இது தான் அவர்களோட தாரக மந்திரம்.

ஒரு முறை திருநெல்வேலி வழியாக ஊருக்கு போகும் பொழுது சிறுநீர் முட்டிக்கொண்டுவந்தது. ஊர் போய் சேர்வதற்கு இன்னும் இரண்டு மணிநேரமாவது ஆகும். திருநெல்வேலியில் பஸ்டாண்ட் அப்பொழுது ஊருக்குள் இருந்தது. அந்த பஸ்டாண்டில் ஒரு கழிவறையை பார்த்ததும் இயற்கை உபாதையை சரிசெய்யலாம் என்று போனேன். வாசலிலே இருந்த ஒருவனிடம் 1 ரூபாய் கொடுத்துவிட்டு உள்ளே செல்ல காலை வைத்தேன். உண்மையாக செல்கிறேன், அங்கு இருந்த நிலவரத்தை பார்த்ததும் உள்ளே போக மனமே வரவில்லை. அங்கு அடித்த ஒரு வித வீச்சம் வேறு குடலை பிடுங்கி கொண்டு வாந்தி வருவது போலிருந்தது. இயற்கை உபாதையை கழிக்காமலே ஓடி வந்து பஸ்ஸில் உட்கார்ந்துகொண்ட்டேன். அடுத்த இரண்டு மணி நேரம் நான்பட்ட கஷ்டம் சொல்லிமாளாது. வெளியே வரும்பொழுது கழிவறைக்கு வெளியே ஒருத்தர் சுவர் பக்கமாக திரும்பி தன் உபாதையை கழித்துக்கொண்டிருந்தார். சுத்தி நிறைய சனங்கள் ந‌டமாடிக்கொண்டிருந்தார்கள். ஆசை வெட்கமறியாது என்பார்கள். அவசரமும் வெட்கம் அறியாது. 

சிறுநீர் கழிக்க 1 ரூபாய் கட்டணம் வாங்குகின்றாயே உன்னால் அதனை சுத்தமாக வைத்துக்கொள்ள தெரியாதா. நீ சுத்தமாக வைத்திருந்தால் அவன் ஏன் கழிவறை இருந்தும் வெளியில் சிறுநீர் கழிக்கிறான். நகராட்சியோ/ மாநகராட்சியோ இந்த மாதிரி கழிவரைகளை சில இடங்களில் கட்டிவைத்து ஏலம் விடுவதோடு தங்கள் பணி முடிந்துவிட்டதாக நினைத்து ஒதுங்கி விடுகின்றார்கள். அதனை அவர்கள் எப்படி பராமரிக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. அவர்களுக்கு வரவேண்டிய கட்டிங் வந்ததும் அவர்களோட பணி முடிந்துவிட்டது.

வெளிநாடுகளில் அனைத்து பூங்காக்களிலும் கழிவறை வசதி இருக்கும். அதுவும் சுத்தமாக இருக்கும். தைவானில் அனைத்து கன்வீனியன்ஸ் ஸ்டோர்களிலும் (7/11, ஃபேமிலி மார்ட், ஹைலைஃப்) கழிவறை இருக்கும். அங்கு போய் நாம் கழிவறையை உபயோகிக்க வேண்டும் என்றால் உடனே எங்கு இருக்கிறது என்பதை காண்பிப்பார்கள். அப்படி அந்த கடையில் இல்லை என்றால் பக்கத்தில் எந்த கடைகளில் இருக்கிறது என்றாவது சொல்லுவார்கள். நாம் அந்த கடைகளில் எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கழிவறையை உபயோகித்துவிட்டு ஒரு நன்றியை சொல்லிவிட்டு வந்து கொண்டே இருக்கலாம். அவர்கள் நன்றி கூட எதிர்பார்ப்பதில்லை என்பது வேறு விசயம். குறிப்பாக கழிவறையை உபயோகிப்பது முற்றிலும் இலவசம். 

எத‌ற்கெடுத்தாலும் வெளிநாட்டோடு ஒப்பிட்டு பார்ப்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான். ஆனால் நீங்கள் "க்லீன் இந்தியா" வேண்டும் என்று கூப்பாடு போடும் பொழுது அதற்கு உரிய அடிப்படை வசதிகூட இல்லாத ஒரு விசயத்தை இப்படி தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டி இருக்கின்றது.

சென்னையையே எடுத்துக்கோங்க, சென்னையின் நீண்ட சாலைகளில் எத்தனை கழிவறைகள் இருக்கின்றன. அதில் எத்தனை சுத்தமாக இருக்கின்றது. சென்னையில் இருக்கின்ற சிறு கடைகளில் எல்லாம் கழிவறை வசதி இருக்கின்றதா?. அப்படி வசதியில்லாத போது அதில் வேலை செய்பவரக்ள் எல்லாம் எங்கு போய் இயற்கை உபதையை சரிசெய்வார்கள்?. சென்னையில் இருக்கின்ற பூங்காக்கள் அனைத்திலும் கழிவறை வசதியிருக்கின்றதா? ஆசியாவின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரையில் எத்தனை இடத்தில் கழிவறை வசதியிருக்கிறது?. அது அங்கு வருபவர்கள் அனைவருக்கும் போதுமானதாக இருக்கின்றதா? கோயம்பேடு கழிவறை சுத்தமாக இருக்கின்றதா? சென்ரல் ஸ்டேசன் கழிவறை சுத்தமாக இருக்குதா? இந்த யூடியூப் மும்பையில் எடுத்தது என்று செய்திகள் சொல்கின்றன. இவர்கள் தண்ணீர் அடித்த தெருக்களில் அல்லது பக்கத்து தெருக்களில் இலவச கழிவறை இருக்கின்றதா?. இப்படி எத்தனயோ இருக்கின்றதா? கேள்விகள். இப்படி எந்த வித வசதியும் இல்லாத போது, "க்லீன் இந்தியா" என்கின்ற உங்க கூப்பாடே சரியில்லேயே? 

இந்தியாவில் பொதுக் கழிப்பிடம் நிறைய கட்டி வைத்துவிட்டு அதுக்கப்புறம் அவன் பொதுப்பாதையில் சிறுநீர் கழித்தால் தண்ணீர் அடிங்க அல்லது ஆசிட் அடிங்க. அத யூடியூப்பில் போட்டு மானத்தை வாங்குங்க. அப்போ எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி எந்த வசதியும் செய்துகொடுக்காமல், நீ சிறுநீர் கழித்தால் உன் மீது தண்ணீர் அடிப்பேன் அதை படம் பிடிப்பேன் என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

இந்த படம் எடுத்தவனை அல்லது அமைப்பினரை பிடித்துவந்த லிட்டர் கணக்குல தண்ணீர் குடிக்கவைத்து சிறுநீர் முட்டிக்கிட்டு வரும்பொழுது சென்னையில் மவுண்ட் ரோட்டிலோ அல்லது பெரிய நகரங்களின் மிக நீண்ட பதைகளிலோ கொண்டு போய் விட்டுட்டா அவனுக்கு அதன் வலி தெரியும்.

நீங்க லாரி நிறைய தண்ணீர் நிரப்பி, தெரு எல்லாம் ரோந்து வந்து தண்ணீர் அடிக்க செலவு செய்த காசில், ஒரு தெரு அல்லது ரோட்டை தத்து எடுத்து அந்த தெரு/ரோட்டில் ஒரே ஒரு இலவச கழிவறையாவது கட்டிவைத்து அதற்கு ஒரு ஆளை போட்டு பாராமரித்து, பாதை ஓரத்தில் சிறுநீர் கழிப்பவ‌ர்களிடம் அங்கு கழிவறை இருக்கு அங்கு போய் உங்கள் உபாதையை கழியுங்கள் என்று கூறி, அதனை யூடியூப்பாக்கி பதிவேற்றியிருந்தீர்கள் எனறால் பாராட்ட படவேண்டிய விசயம். அல்லது அரசாங்கத்திடம் போராடி தெருவுக்கு தெருவு இலவச சுத்தமான கழிவறை கட்ட வைத்திருந்தால் அதற்கு உங்களுக்கு பாராட்டு விழாவே நடத்தலாம். 

அதுவும் பண்ண மாட்டோம், இதுவும் பண்ணமாட்டோம், ஆனால் தண்ணீர் மட்டும் பீச்சி அடிப்போம், அதை படம் எடுத்து யூடியூப்பில் போட்டு மானத்தை தான் வாங்குவோம் என்றால் போங்கடே நீங்களும் உங்க "க்லீன் இந்தியாவும்".

Tuesday, January 21, 2014

காண்டா விளக்கு 2.2 - நடுக்கத்தின் சாட்சி (பயம்)

அப்பொழுது ஒரு ஹோட்டலின் 13 வது மாடியில் தங்கி இருந்தேன். 2007-ஆம் ஆண்டு தைவான் வந்த புதிதில் வீடு கிடைக்காமல் ஹோட்டலில் தங்க வைத்திருந்தார்கள். ஜெட் லாக் இருந்த சமயம் அது. சென்னை நேரத்துக்குத் தான் தூக்கம் வரும். அன்று இரவும் 12 மணிக்கு மேல் தான் தூங்க சென்றேன். நல்ல தூக்கத்தில் கட்டிலானது தொட்டில் போல் அங்கேயும் இங்கேயும் ஊஞ்சல் ஆடியது. கண்ணைத் திறந்து பார்த்தால் கட்டிடமே ஆடிக்கொண்டிருந்தது. அதில் என்னுடைய கட்டில் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துப் பயத்தில் எழுந்து நின்றேன். என்னால் நிற்க முடியவில்லை. காணாத குறைக்கு ஒரு விதமான மயக்கம் வேறு. கட்டிலில் தொப்பென்று விழுந்தேன்.
தைவானில் உள்ள 101 மாடி கட்டிடத்தில் உள்ள அமைப்பு. கட்டிடம் ஆடும் பொழுது மைய‌ஈர்ப்பு விசயை விட்டு விலகாமல் இருக்க இப்படி ராட்ச குண்டுகள் சில மாடிகளில் வைத்திருக்கின்றார்கள்.

நிலநடுக்கம் வரும் பொழுது கட்டிலுக்கு அடியில் அல்லது மேஜைக்கு அடியில் போய்ப் பதுங்க சொல்லுவார்கள். ஏதாவது உடைந்து விழுந்தால் நம் மீது நேரடியாக விழாது. தைவானில் இருக்கும் கட்டிலில் எல்லாம் நம் ஊரில் உள்ள கட்டில் போன்று உயரமான கால்கள் இருக்காது. தரையோடு இருக்கும். அதன் இடைவெளியில் ஒரு எலி வேண்டுமானால் நுளையலாம். கட்டிலை விட்டுக் கொஞ்சம் தூரமாகச் சிறிய மேஜை இருந்தது. இந்த ஆட்டத்தில் அதனை நோக்கி போவது எல்லாம் குதிரை கொம்பு. கட்டிடத்தில் இருந்து கட கட என்று சத்தம் வேறு வந்து பயத்தை அதிகப்படுத்தியது. அப்பொழுது தான் ஒரு யோசனை வந்தது. ஏதாவது ஒரு லின்டல்(குறுக்காக வரும் கான்கிரீட் பில்லர்) க்கு கீழே போய் நின்று கொண்டால் ஏதாவது உடைந்தால் முதலில் அது கொஞ்சமேனும் தாங்கிக்கொள்ளும் என்று தோன்றியது. உடனே கட்டிலுக்குப் பக்கத்தில் லின்டல் இருக்கின்றதா என்று தேடினால், அறையையும், குளியல் அறையயும் பிரிக்கப் போட்டிருந்த லின்டல் இருந்தது. சுவர் போகக் கொஞ்சம் வெளிபக்கமாக நீட்டிக்கொண்டிருந்தது. சரி அதற்குக் கீழே(??) போய் நிற்கலாம் என்று கட்டிலை விட்டு எழுந்து இரண்டு கையையும் விரித்துச் சுவரை ஆவிகெட்டியாகப்(!) பிடித்துகொண்டு நின்றுகொண்டேன்.

கட்டிடம் ஆடுவதோ நின்ற பாடில்லை. பயம் வேறு ஆட்டிப்படைத்தது. "தரை பொத்துக்கொண்டு கீழே போயிட்டா" அப்படி என்று என்னும்பொழுதே பயம் பந்து போல அடிவயிற்றில் உருண்டு மேல வந்தது. தெரியாத ஊருல இப்படி அனாதையா வந்து மாட்டிக்கொண்டோமே. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சின்னா என்ன பன்னுறது என்ற எண்ணம் அலைமோதியது. வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொருவாரா கண்ணுக்குள் வந்து சென்றார்கள். ஆனால் இத்தனை களோபரத்திலும் வெளியே நிலநடுக்கம் வருகின்றது என்பது போன்ற ஒரு சத்தம் கூடக் கேட்க வில்லை. நாம் மட்டும் தான் இந்தத் தளத்தில் தங்கி இருக்கின்றோமோ என்ற எண்ணம் வேறு பயத்தை அதிகரித்தது. நம் ஊராக இருந்தால் போடுகின்ற கூச்சலிலே பாதிப் பயம் போய்டும்.

ஒரு வழியாகக் கட்டிட ஆட்டம் குறைந்து. சுவரை ஆவிகட்டி நிற்பதை விடுத்து மெதுவாகக் கட்டிலில் உட்கார்ந்தேன். கீழே தரைதளத்திற்கு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு டி-ஷர்ட் எடுத்துப் போட்டுக்கொண்டு கதைவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தேன். காரிடாரில் ஒருவர் ஏணியைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஏணியின் மேலோ இன்னொருவர் நின்று ஆணி அடித்துக்கொண்டிருந்தார். நிலநடுக்கம் நின்று முழுவதுமாக 1 நிமிடம் கூட இருக்காது. அதற்குள் இவர்கள் எப்படி வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓரு வேலை நாம் தான் கனவு எதாவது கண்டு பயந்துவிட்டோமா என்று தோன்றியது. எதற்கும் அவர்களைக் கேட்டுவிடலாம் என்று மெதுவாக நடந்து அருகில் சென்றேன்.

ஏணியைப் பிடித்துக் கோண்டிருந்தவர் ஏற்கெனவே தெரிந்தவர் தான். ஹோட்டலில் வரவேற்பரையில் சில நேரங்களில் இருப்பார். கொஞ்சம் ஆங்கிலம் வேறு பேசுவார். அவரிடம் நீங்கள் தற்பொழுது ஏதாவது உணர்ந்தீர்களா என்று கேட்டேன். ஆம், நிலநடுக்கம் வந்தது என்றார். மேலே இருப்பவர் மீண்டும் ஆணி அடித்துக்கொண்டிருந்தார்.

சரிதான், என்று திரும்பி வந்து கட்டிலில் படுத்து தூங்க ஆரம்பித்தேன்.
 
 
குறிப்பு: நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலின் படி கிட்டதட்ட 6.5 என்று நினைக்கிறேன். அடுத்த நாள் நண்பர்கள் அனைவரும் தாங்கள் அனைவரும் பயத்தில் ரோட்டிற்கு வந்துவிட்டதாகவும், கண நேரம் ரோட்டிலே இருந்த‌தாகவும் கூறினார்கள். உணமையாகவே மரணபயத்தை உண்டாக்கிய ஒரு நிகழ்வு அது.

Wednesday, December 25, 2013

காண்டா விளக்கு 2.1 - நடுக்கத்தின் சாட்சி (ஆழிப்பேரலை)

இன்றோடு சரியாக ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டது. அன்று நடந்ததை இன்று நினைத்தாலும் மனம் கனத்துவிடுகின்றது.

வருடம் 2004 மாதம் டிசம்பர் 26 ஆம் நாள். முந்தய நாள் கிருஸ்த்மஸ் கொண்டாட்டம் முடித்து பின் இரவில் தான் படுக்கைக்கு சென்றேன். அப்பொழுது சென்னையில் என்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கி இருந்து தான் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். திருவல்லிக்கேனி நெடுஞ்சாலையில் ஸ்டார் தியேட்டருக்கு நேர் எதிராக இருக்கும் கட்டிடம். கீழே மூன்று தளங்களிலும் சிறிய அலுவலகங்கள் இருக்கும், நான்காம் மாடியில் நாங்கள் மட்டும் இருந்தோம். எனக்கு என்று தனியாக ஓர் அறை. அதில் ஒரு மடக்க கூடிய கயிற்று கட்டில். என்னுடைய சகோதரியின் குழந்தைகளுக்கு என்னோடு விளையாட பிடிக்கும். நான் தான் அதிகமாக விளையாடுவதில்லை. நான் என்னுடைய அறைக்கு வந்துவிட்டால், நான் என்ன செய்கிறேன் என்று ஒளிந்து வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். 26 ஆம் தேதி காலை சுமார் 6.30 மணியிருக்கும் என்னுடைய கட்டில் ஆடியது. நல்ல தூக்க கலக்கம். என்னுடைய சகோதரி மகள் தான் வந்து கட்டிலை ஆட்டிகொண்டிருக்கின்றாள் என்ற நினைப்பில் கண்களை திறவாமலே "மாமா தூங்கி கொண்டிருக்கின்றேன், நாம் அப்புறமா விளையாடலம், நீ போய் டிவி பார்" என்று சொல்லி முடிக்கவில்லை, மீண்டும் அதே போன்ற ஒரு ஆட்டம். கண்களை வலியக்க திறந்தால் அறையில் யாரும் இல்லை. பின்னர் யார் கட்டிலை ஆட்டியது என்று அப்படியே ஒருக்களித்து பார்த்தால், மீண்டும் கட்டில் ஆடத்தொடங்கியது. முதலில் என்னவோ எதோ என்று பயம் வந்தாலும், கதவை கவனிக்கும் போது அதில் ஒரு சிறு அதிர்வு தெரிந்தது. ஜன்னலை எட்டி பார்த்தால் அதன் கதவும் அன்றாக ஆடியது. இது நிலநடுக்கம் என்ற உணர்வு மூளையை தொட்ட உடனே படுக்கையில் இருந்து எழுந்து அடுத்த அறைக்கு ஓடினேன்.
 
நாங்கள் இருந்த கட்டிடம் கொஞசம் பழையது. எதுவேணும் நடக்கலாம். முதலில் வீட்டில் இருப்பவர்களை எழுப்பி கீழ் தளத்துக்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியது. அடுத்த அறைக்கு சென்று நிலநடுக்கம் வந்து கொண்டிருக்கு எல்லோரும் கீழே ஓடுங்கள் என்றேன். அவர்கள் யாரும் நிலநடுக்கத்தை உணரவில்லை. எனக்கோ விளக்கம் சொல்ல நேரமில்லை. எல்லோரும் முதலில் கீழே இறங்குங்கள் என்று கூறி அனுப்பிவிட்டு நானும் கீழே இறங்கி சென்றேன். தரை தளத்தில் ஒரு டீ கடை இருந்தது. சில பேர் நின்று டீ குடித்து கொண்டிருந்தார்கள். டீ மாஸ்டர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். நன்றாக பேசுவார். நாங்கள் எல்லோரும் காத்தாலே கீழே இறங்கியதும் அவர் எங்கு போகின்றீர்கள் என்றார். நிலநடுக்கம் அதான் எல்லோரும் கீழே வருகின்றோம் என்றேன். அவர் நாங்கள் யாரும் உணரவில்லையே என்றார். பக்கத்தில் நின்றவர்களும் நாங்களும் உணரவில்லை என்று சொன்னார்கள். எங்கள் வீட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் என்னை குறை கூற ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு வேலை நாம் 4ஆம் மாடியில் இருந்ததால் உண்ர்ந்திருப்போம் இவர்கள் கீழே இருந்ததால் உணரவில்லை என்று சமாளித்தேன். ஆனால் யாரும் நம்பியது போல் தெரியவில்லை. மேலும் ஒரு 10 நிமிடம் கீழே நின்று கொண்டிருந்தோம். பக்கத்து தெருவில் இருந்து வந்த ஒருவர், நிலநடுக்கம் அதிகமாக இருந்தது என்று யாரிடமோ உரக்க சொன்னார். அப்பொழுதுதான் எங்கள் வீட்டிலிருந்தவர்களும் டீக்கடையில் நின்றவர்களும் என்னை நம்ப ஆரம்பித்திருந்தார்கள். சிறிது நேரம் கழித்து தொடர் நடுக்கம் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு மேலே வந்தோம்.
 
காலை 9:30 மணிக்கு குளித்துகொண்டிருந்தேன். கச்சா முச்சா என்று கூச்சல் கேட்க ஆரம்பித்தது. என்னுடிய அத்தானிடம் என்ன சத்தம் என்று கேட்டால் கடல் தண்ணீர் உள்ளே வருதாம் அதனால் பிளாட்பாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் மேலே ஏறி வந்துவிட்டார்கள், அதான் இந்த சத்தம் என்றார். எவனோ ஒருத்தன் நல்லா புரளியை கிளப்பி விட்டுருகான், கடல் தண்ணீர் எப்படி உள்ளே வரும் என்றேன். இல்லை கடல் தண்னீர் உள்ளே வருகின்றதாம், கண்ணகி சிலைய தாண்டி ஸ்டேடியம் பக்கம் வந்திருச்சாம். இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டு பக்கம் வந்திடுமாம் என்று சொன்னார்.  டிவியை வச்சி பாருங்க என்றேன். எந்த சானலிலும் இதை பற்றி ஒன்றும் சொல்ல வில்லை என்றார். நாம் போய் என்ன ஏது என்று பார்த்துவிட்டு வருவோம் என்று அவரையும் அழைத்துக்கொண்டு படி இறங்கி கீழே செல்ல ஆரம்பித்தோம்.
 
பிளாட்பாரத்தில் குடியிருந்தவர்கள் அனைவரும் மூன்றாம் மாடிக்கு வந்து நின்றுகொன்டிருந்தார்கள். கூடவே அவர்களுக்கு வேண்டிய சாமான்களும் மூட்டையில் இருந்தது.  கீழே போய் வண்டியை எடுத்து புறப்படும் பொழுது, அவரோ ஒரு சந்துக்குள் போய் அப்படியே சேப்பாக்கம் வழியாக போய்விடலாம் என்றார். நானோ இது தவறான ஐடியா. ஆத்திர அவசரத்துல திரும்பி வரும் போது எதாவது முட்டு சந்துக்குள்ள மாட்டிக்க கூடாது அதனால் கண்ணகி சிலைக்கு எதிர் ரோட்டை பிடித்து(ராயப்பேட்டை ரோடு என்று நினைக்கிறேன்) போகலாம் என்று அந்த வழியாக போக ஆரம்பித்தோம். ரோட்டில் நெரிசலே இல்லை. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வந்து கண்ணகி சிலைக்கு போகும் ரோட்டில் திரும்பினோம். அங்கும் நெரிசலே இல்லை. அப்படியே மெதுவாக போய் ஸ்டேடியத்தை தாண்டினோம். ஒரு சொட்டு தண்ணீரும் தெரியவில்லை. பார்த்தீங்கலா எவனோ ஒருத்தன் ஸ்டேடியம் தாண்டி தண்ணீர் வந்துடுச்சி என்று புரளி கிளப்பிவிட்டுடான் என்று அவரிடம் கூறி சிரித்துக்கொண்டே, கண்ணகி சிலை வரைக்கும் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று மேலும் வண்டியை ஒட விட்டோம். வண்டி பறக்கும் ரயில் பாலத்தையும் தாண்டிவிட்டது, ஒரு சொட்டு தன்ணிர் கூட தெரியவில்லை. அப்படியே போய்கொண்டிருந்தோம். கண்ணகி சிலைக்கு முன்னாடி ஒரு சின்ன விளையாட்டு மைதானம் இருக்கும். அங்கு நிறைய பேர் கிரிக்கெட் விளையாடுவார்கள். அந்த இடம் வந்ததும் போலீஸ்கார்ர் ஒருவர் குறுக்கால ஓடி வந்து வண்டியை நிறுத்தினார்.
 
அங்கு வண்டி போகாது, நீ இங்க நிறுத்தி நடந்து போ என்றார். அப்பொழுதுதான் எதோ ஒன்று நடந்திருக்கு என்ற என்னம் லேசாக மனதிற்குள் தோன்றியது. ஆனால் மக்கள் சொன்ன மாதிரி அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தண்ணீரும் தெரியவில்லை வேறு விபரீதம் நடந்த அடையாளமும் தெரியவில்லை. ஒரே ஒரு வித்தியாசம். விடுமுறை நாட்கள் என்றால் காலை முதல் மாலை வரை ஜே ஜே என்று இருக்கும் அந்த விளையாட்டு மைதானம் ஈ ஓட்டிக்கொண்டிருந்தது. வண்டியை ஒரு ஒரமாக நிறுத்திவிட்டு கண்ணகி சிலை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.

கண்ணகி சிலைக்கு மிக அருகில் வரும்பொழுது ரோட்டின் இரு பக்கமும் நன்றாக பார்க்க முடிந்தது. முதன் முதலாக ரோட்டின் மத்தியில் ஒரு மோட்டார் வைத்து ஓடக்கூடிய கொன்சம் பெரிய மீன் படகு கவிழ்ந்து கிடந்தது. ஆனால் ரோட்டில் ஒரு துளி தண்ணீர் இல்லை. இது எப்படி இங்கு வந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டே மேலும் முன்னேறினோம்.
 
காமராஜர் சாலையானது கடற்கரை மணல் பரப்பிலிருந்து மூன்று, நான்கு அடிகள் உயரமாக இருக்கும். அதனால் ரோட்டின் இந்த கரையில் வந்து பார்த்தால் தான் நன்றாக தெரியும். இந்த கரையில் வந்து பார்த்தால் பீச் கன்னா பின்னா என்று என்று இருந்தது. படகுகள் ரோட்டின் ஓரமாக குவிந்து கிடந்தன. கார்கள் தலைகுப்பற உருண்டு கிடந்த்தன. இந்திய கடற்கரை பாதுகாப்பு கப்பல் ஒன்று மெரினா கடலின் கரைக்கு அருகே நின்று கொண்டிருந்தது. கடலுக்குள் இருந்து ஒரு ஹெலிகாப்டர் வெளியே வந்து கொண்டிருந்தது. அதில் கயிற்றில் எதோ தொங்கிகோன்டிருந்தது. அது சடலமாக இருக்க கூடும்(அடுதத நாள் செய்திகளில் ஹெலிகாப்டர் கொண்டு கடலுக்குள் இருந்து சடலம் எடுத்ததாக போட்டிருந்தார்கள்).
நான் செல்லும் பொழுது கடலானது அதன் வழக்கமான எல்லைக்குள்ளே இருந்தது. இத்தனை களோபரத்திலும் நம் மக்கள் கடற்கரையில் கடல் அலையில் நின்று கொண்டிருந்தார்கள். கடல் வழக்கம் போல் இல்லாமல் ஓங்கரித்துக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் ஒரு பெருத்த அலை வருவது போன்றிருந்தது. கடற்கரையில் நின்ற மக்கள் ரோட்டை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். நீங்கள் நம்புவீர்களா இல்லயா என்று எனக்கு தெரியவில்லை. கடற்கரைக்கும் - ரோட்டிற்கும் இடையில் குறைந்தது ஒரு 300 மீட்டர் இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை கடல் அலை நிர‌ப்ப எடுத்துக்கொண்ட கால அளவு வெறும் 3 - 4 வினாடிகள் மட்டுமே. ரோடு உயரமாக இருந்ததால் அதனை தாண்டி வரவில்லை. நடுவில் கிடந்த படகு கார்கள் எல்லாம் அந்த அலையில் அடித்து வரப்பட்டு ரோட்டின் கரையில் மோதின. எவ்வளவு வேகத்தில் வந்ததோ அதே வேகத்தில் கடல் அலை மீண்டும் உள்வாங்கியது. உள்வாங்க ஒரு 30 வினாடிகள் எடுத்துக்கொண்டு மீண்டும் அதன் எல்லையில் போய் நின்று கொண்டது. நான் அங்கு ஒரு 30 நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். அதற்குள் நான்கு முறை ஆழிப்பேரலை வந்து ரோட்டை தொட்டு விட்டு சென்றது.


பின் அலையின் உக்கிரமே இப்படி இருக்கும் என்றால் முன் அலை(முதல் ஆழிப்பேரலை) எவ்வளவு வேகத்தில் வந்திருக்கும். அதன் தாக்கமே முகப்பெரிய படகு நடு ரோட்டில் கிடந்தது. நடைபயிற்சி சென்றவர்கள், கிரிக்கெட் விளையாடிய விடலை பசங்க என்று ஒட்டு மொத்தமாக சூறையாடியது. ஆனால் இது எதனையும் உணராமல் குறைந்தது ஒரு 50 பேர் பின் அலைகளில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அலை வரும் பொழுது வெளியே ஒடி வருவதும் அலை வடிந்ததும் மீண்டும் கடற்கரைக்கு செல்வதுமாக. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்.
 
பொய், யாரோ ஏமாற்றுகின்றார்கள் என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டே வந்த நான் கனத்த இதயத்துடன் வீடு திரும்பினேன். திருப்பிய சானல் எல்லாம் இதனையே ஒளிபரப்பினார்கள். அடுத்து நாள் வந்த செய்தித்தாள்களை எல்லாம் மனம் கொண்டு படிக்க முடியவில்லை. சென்னை, கடலூர், நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் என்று கடற்கரைகள் அனைத்தும் சின்னாபின்னமாயின. வித விதமான காட்சிகள் செய்திகளாக பட்டிருந்தன. செய்திதாளை பார்துக்கொண்டிருந்த போது மாமல்லபுரத்தில் இருந்த தமிழ்நாடு டூரிசம் டெவெலப்மெண்ட் கார்பரேசனுக்கு செந்தமான ரிசாகட் முழுவதுமாக அழிந்தது என்று படத்தோடு போட்டிருந்தார்கள். பக் என்றது. சரியாக 7 நாட்கள் முன்னர் அதே ஞாயிறு அன்று சுமார் 250 பேர் அங்கு தங்கியிருந்தோம். நான் தங்கி இருந்த கட்டிடம் முழுவதுகாக கடலுக்கு இரையாகியிருந்தது.

நிறைய பேர் வீடு, வாசல், சொந்தம் என்று இழப்புகள் மிக மிக‌ அதிகம். மீட்புபணிகள் ஒரு வாரத்துக்கு சிறப்பாகவே நடந்தது என்று நினைக்கிறேன். அந்த சம்பவத்திற்கு பின்னர் இரண்டு முறை ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. ஆனால் அவர்களுக்குறிய நிவாரணம் சரியாக சென்றடைந்ததா என்பது தான் தெரியவில்லை.

                                                                                                                        தொடரும்...
படங்கள் உதவி : கூகுளாண்டவர்
 

Monday, December 23, 2013

மார்கழி திங்கள்

"மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளாம்" என்று பாட்டு பாடும் மார்கழி மாதம் ஆரம்பித்து விட்டது. எனது சிறுவயது மார்கழி மாத அனுபவம் பக்தி பரவசமாகவே கழிந்தது.

எனக்கு அப்பொழுது 10 வயது இருக்கும். எங்கள் ஊரில் முதன் முதலில் மார்கழி மாதத்து பஜனை ஆரம்பித்தார்கள். காலை 4:30 மணிக்கு பஜனை ஆரம்பிக்கும் என்று முதல் நாளே சொல்லிவிட்டார்கள். அப்பொழுது எங்கள் ஊர் அம்மன் கோவிலுக்கு சொந்தமாக மைக்-செட் கிடையாது. வாடகைதான். எங்கள் ஊர் சுடலைமணி அண்ணனோ அல்லது பாஸ்கர் அண்ணனோ தான் மைக் செட் கட்டி இருந்தார்கள். மார்கழி மாதத்தின் முதல் நாள் விடிய காலம் மூன்றரைக்கு ரேடியோ குழாய் "வினாயகனே வினை தீர்ப்பவனே" என்று சத்தமாக பாட ஆரம்பித்தது. திடுக்கிட்டு முழித்து அதன் பின்னர் பஜனையை நினைத்து மனமானது சமாதனமாகியது. கடும் குளிர். வீட்டில் வெண்ணீர் வைத்து கொடுத்தார்கள். அதிகாலை வெண்ணீர் குளியல் உடம்புக்கு இதமாக இருந்தாளும் குளித்து முடித்ததும் பற்கள் தன்னாலே தந்தி அடிக்க ஆரம்பித்தது.
 
எனக்கு முன்னரே கோவிலில் நிறைய பசங்க வந்து நெத்தியில் பட்டை போட்டு, சந்தணம், குங்குமம் வைத்து ரெடியாக இருந்தார்கள். பக்கத்து ஊரில் இருந்து அந்தோணி புலவர் வந்திருந்தார். அவர் ஒரு வில்லு பாட்டு கலைஞர், புலவர். அவர்தான் எங்களுக்கு பாடல் சொல்லிகொடுக்க போகிறார் என்று சொன்னார்கள். எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் இரன்டு சிங்கி(ஜால்ரா) உபயம் செய்திருந்தார்கள். அதனை கொஞ்சம் பெரிய பசங்க எடுத்து கொண்டார்கள். ஒருவர் தாம்பாள தட்டு எடுத்துக்கொண்டார். அதில் நிறைய திருநீரும், சூடகமும் இருந்தது. அதில் ஒரு சூடகத்தை தட்டின் ஒரு ஓரத்தில் கொளுத்தி விட்டார்கள். ஒரு சிலரின் கைகளில் திருப்பாவை பாடல் அடங்கிய ஒரு புத்தகம் கொடுத்தார்கள். எனக்கும் ஒன்று கிடைத்தது.
 
எங்கள் ஊர் கோவிலில் ஒரு பெட்ரமாஸ் லைட் இருக்கும். கொஞ்சம் பழசு என்றாலும் இன்று வரைக்கும் நன்றாகவே எரிந்து கொண்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரிரு மின்சார விளக்குகள் தெருவில் எரிந்து கொண்டிருக்கும். நிறைய தெருக்கள் கும்மிருட்டாகவே இருக்கும். பெட்ரமாஸ் லைட் தான் துணை. அதனை ஒருவர் எடுத்துக்கொண்டார். என்னை அந்தோணி புலவரின் அருகே வரச்சொன்னார்கள்.
 
"மார்கழி திங்கள்" என்று முதல் வரியை அந்தோணி புலவர் பாட, பின்னாடி நாங்கள் அனைவரும் "மார்கழி திங்கள்" என்று பின் பாட்டு பாட ஆரம்பித்தோம். எங்கள் ஊர் மார்கழி மாதத்து பஜனை இப்படித்தான் ஆரம்பித்தது. 30 பாடலும் ஒரே ராகம், புலவர் பாட நாங்கள் பின் பாட்டு பாடவேண்டும். 10 நாட்கள் கழித்ததும், பசங்க எல்லாம் நன்றாக பாடுவதற்கு கத்துக்கொண்டார்கள்(!). இனிமேல் அவர்கள் தனியாகவே பாடுவார்கள் என்று கூறி வர மறுத்துவிட்டார். அவரொட ஊர் பஜனையும் அவர் தான் பார்த்துக்கொண்டார். அவரால் இரண்டு ஊரையும் சமாளிக்க முடியவில்லை.
 
அதன் பின்னர் வேறு ஒருவர் பாடல் சொல்லிகொடுத்தார். அதே வருடமே நானும் சொல்லிக்கொடுக்கும் படி ஆனது. அதன் பின்னர் நான் கல்லூரி செல்லும் வரை சொல்லிகொடுத்தேன். நண்பன் நந்தகுமார் தாம்பாள(திருநீரு)தட்டு இன்சார்ஜ் எடுத்துக்கொண்டான்.

முத்தாரம்மன் கோவில் வாசலில் அமிர்தன்
பொதுவாக ஜால்ரா தட்டுபவர்களை "ஜிங்-ஜக்" என்று கிண்டல் செய்வோம். அது தவறான தட்டுதல் முறை என்று எங்களை திருத்தி "ஜிங்-ஜிங்-ஜக்" என்று ஒலி வரும் படி மாற்றி ஜால்ரா அடிக்க சொல்லிக்கொடுத்தவர் அந்தோணி புலவர் தான். எத்தனை பேர் ஜால்ரா அடித்தாலும் ஒரே தாள கதியில் அந்த ஒலி வரும். பிசுறு தட்டாமல் கேட்கலாம். (இங்கு ஜால்ரா என்ற வாத்தியத்தை நேரடியாக சொல்கிறேன். வேறு அர்த்தம் எடுத்தால் கம்பெனி பொறுப்பல்ல.)
 
காலை 4:30 மணிக்கே பஜனை பாடி தெருக்களில் சென்றாலும், கிராமத்து பெண்கள் அதற்கு முன்னரே சாணி தெளித்து வீட்டு முற்றத்தில் அருமையான கோலம் போட்டிருப்பார்கள். மாக்கோலம், புள்ளி வைத்த கோலம், ரங்கோலி என்று வித விதமான கோலம் போட்டு அதன் நடுவில் ஒரு சாணி உருண்டை வைத்து அதன் மீது ஒரு பூவர்சம் பூ வைத்திருப்பார்கள். அந்த இருட்டிலும் அதனை அழித்துவிடாது பதனமாக போக வேண்டும். தப்பி தவறி அழித்துவிட்டால் அப்பொழுது ஒன்றும் சொல்ல மட்டார்கள். காலையில் தெருவில் பார்த்தால் சரியான மண்டக்கப்படி கிடைக்கும்.

சிலர் வீட்டில் பஜனை பாடி வருபவர்களுக்கு கருப்பட்டி காப்பி போட்டு தருவார்கள். கூடவே முறுக்கு, மிக்சர் என்றும் சிலர் வீட்டில் கொடுப்பார்கள். அதனை பஜனை பாடி வருபவர்களுக்கு ஒரு சேவையாக(?) செய்தார்கள். அடியார்க்கு அடியார் சேவை போன்று.
 
கோவிலில் தினமும் சர்கரை பொங்கல் போடுவார்கள். சில நாட்கள் யாராவது நேமிசம் செய்வார்கள். அப்பொழுது பொங்கல், சுண்டல், பழம், தேங்காய் என்று பிரமாண்டமாய் இருக்கும். சம பங்கீடு என்பதை நான் கற்றுக்கொண்ட இடம் எங்கள் ஊர் கோவில் தான். 10 வாழை பழத்தை 10 பேருக்கு பங்கு வைக்கவும், ஒரே ஒரு வாழை பழத்தை 10 பேருக்கு பங்கு வைக்கவும் கற்றுக்கொடுத்த இடம். இன்னும் சிலர் இருக்கின்றார்கள், ஒரே ஒரு வாழை பழத்தை 20 பேருக்கு கூட பங்கு வைப்பார்கள், சிப்ஸ்க்கு சீவுவதை விட மெலிதாக சீவுவார்கள். கோவில்லுக்கு வந்த யாரும் இல்லை என்று போகக்கூடாது என்ற பரந்த மன‌ப்பான்மை.
 
பஜனை ஆரம்பிதத 20 நாட்களுக்குள் வெளிச்சமில்லாமல் இருட்டில் கூட பஜனை பாடிக்கொண்டு செல்லும் அளவுக்கு எங்கள் அனைவருக்கும் திருப்பாவை மனப்பாடமாக தெரிந்திருந்தது. எங்கள் ஊர் ஒரு சிறிய கிராமம் என்பதால் 30 வது பாடல் சரியாக கோவிலில் முடியும் படி இருக்கும்.
 
மாலையானால் ஒரு மைக் வைத்து எல்லோரும் கோவிலிலே தனி ஆவர்தனமும் செய்ததுண்டு. யார் நன்றாக பாடுவது! யார் புதிய பாடல்களை எல்லாம் பாடுகின்றார்கள்! என்று போட்டியே கூட இருக்கும். எங்கள் ஊரிலே ராணி அக்காவுக்கு ஒருவருக்கு தான் அருணகிரி நாதரின் "முத்தை தரு பத்தி" பாடல் பாடத்தெரியும். அவர்கள் எப்பொழுதாவது பாட வந்தால் மைக்கை அவரிடம் கொடுத்துவிட்டு அந்த பாடலை பாட சொல்லி கேட்போம். முத்தம்மை பாட்டி நிறைய கும்மிபாட்டு சொல்லிகொடுப்பார்கள். பாட்டி பாடுவது ஒரு விதமான ராகத்தில் கேட்க இனிமையாக இருக்கும். பாட்டி நல்ல கதை சொல்லி கூட. எங்கள் வீட்டில் இரண்டு நோட்டு புத்தகம் நிறைய பக்தி பாடல்கள் இருந்தது. என்னுடைய சிறுவயதில் அனைத்து பாடல்களையும் பாடியிருக்கின்றேன்.
 
சரி இந்த பழங்கதை எல்லாம் இப்போ எதுக்கு என்கின்றீர்களா?
 
மார்கழி மாதம் ஆரம்பித்ததும் பழைய நினைவுகளின் தாக்கத்தால் "மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளாம்" என்று பாட ஆரம்பித்தேன். "தயவு செஞ்சி நிறுத்துங்கள். கழுதை கூட கொஞ்சம் ராகமா கத்தும்" என்று பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது. "Daddy you scared me" என்று பின்னாடியே ஒரு எசப்பாட்டு வேறு.
 
வாயை மூடிக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தேன்.
 
நம்ம வாய்ஸ் அவ்ளோளோளோ மோசவா இருக்கு..................!!!!!?

 

Friday, December 20, 2013

கர்ணனின் கவசம்

கர்ணனின் கவசம் என்று ஒரு தொடர் குங்குமத்தில் வந்து இப்பொழுது புத்தகமாக வருகின்றது. தொடரின் ஏதோ ஒரு அத்தியாயம் படித்தேன். நன்றாக இருந்தது. தொடர்ந்து படிக்க முடியவில்லை. புத்தகமாக படிக்க வேண்டும். ஆனால் இந்த பதிவு அந்த தொடர்/புத்தகம் பற்றியதல்ல. அப்படி என்றால் ஏன் இந்த பதிவு என்று கேட்கின்றீர்களா? கர்ணனுக்கு கவசம் எப்படி வந்திருக்கும் என்று என்னுடைய அனுமானத்தை இங்கு எழுத போகின்றேன்.
 
உபயம் : வலைத்தளம்
 
மாகாபாரதம் என்பதானது நிறைய கிளை கதைகள், கிளை கிளை கதைகளால் ஆன ஒரு பெரிய கதை. மகாபாரதத்தில் சொல்லபடாத எதுவும் புதியதாக நடந்துவிடாது என்று பொதுவாக சொல்லுவார்கள் . ஏனெனில் மகாபாரதம் அத்தனை கிளை கதைகள் கொண்டது. ஆனால் இந்த கவசத்தோட பிறந்த கர்ணனின் கதை போன்று ஒரு நிகழ்வு அதன் பின்னர் நடக்கவே இல்லை. அதற்கு பின்னர் கவசத்தோடு ஒரு குழந்தை கூட இது வரை பிறக்கவே இல்லையா?. இல்லை அப்படி பிறப்பவர்களை நம்மால் அடையாளம் காண முடியவில்லையா?
 
கர்ணனின் கவசத்தை அப்படியே விட்டு விட்டு, கொஞ்சம் கிராமத்து பக்கம் வருவோம். கிராமங்களில், சிறு நகரங்களில் சிலரோட பெயர்கள் பட்டு என்று ஆரம்பிக்கும். பட்டுராஜ், பட்டுகுமார், பட்டுசெல்வி, பட்டுராணி... என்று. ஏன் இவர்களுடைய பெயர் எல்லாம் பட்டு என்று ஆரம்பிக்கின்றது? இந்த பட்டு என்பது தெய்வத்தின் பெயரும் இல்லை. சரி குடும்ப பெயரா என்றால், அதுவும் இல்லை. பின்னர் ஏன் பட்டு என்ற பெயர் வைக்கின்றார்கள். அங்கு தான் ஒரு விசயம் இருக்கின்றது.
 
பொதுவாக குழந்தைகள் பிறந்ததும், அதன் மீது இருக்கும் செடி,கொடிகள் அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு பார்த்தால் குழந்தை பளிச்சென்று தெரியும். ஆனால் மிகவும் அரிதாக‌ ஒரு சில குழந்தைகள் மீது பட்டு போன்ற இன்னொரு தோல் மூடியிருக்கும். அதன் உடலின் மீது ஒரு சட்டை கவசம் போன்று ஒட்டி இருக்கும். கிராமங்களில் இதனை சொல்லும் பொழுது குழந்தை பட்டு போட்டு பிறந்திருக்கின்றது என்று சொல்வார்கள். இப்படி பிறக்கும் குழந்தையை மிகவும் அதிர்ஷ்டமாக பார்ப்பார்கள். டாக்டரோ அல்லது செவிலியோ குழந்தையையும்,இந்த மெல்லிய பட்டு போன்ற தோலையும் பிரித்தெடுத்து அந்த பட்டு போன்ற தோலை பாடம் செய்து தாயிடம் தனியாக கொடுத்துவிடுவார்கள். அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது இதனையும் நினைவு கூறும் வகையில் பட்டு என்று ஆரம்பித்து எதோ ஒரு பின் பெயரையும் சேர்த்து வைத்துவிடுவார்கள். இப்படி பட்டு என்று பெயர்வருபவர்களின் வீட்டு பரனியை தேடிபார்தால் இன்றும் அந்த பட்டு தோலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பதை பார்க்களாம்.
 
இது மனிதனிடம் மட்டுமே அபூர்வமாக நடக்கின்ற விசயமா என்றால் இல்லை. மற்ற விலங்கினங்களிலும் அரிதாக நடக்க கூடிய ஒரு விசயம். எங்கள் வீட்டில் ஒரு மாடு இது போன்ற ஒரு கன்னுகுட்டி போட்டிருந்தது. அதனை எங்கள் வீட்டில் ஒரு டிரேசிங் பேப்பரில்(நகல் எடுக்கும் தாள்) சுற்றி பத்திரமாக பாதுகாத்தோம். அந்த மாட்டை மட்டும் பட்டு என்று செல்ல பெயரிட்டு அழைப்போம். அந்த மாட்டை விற்க்கும் வரைக்கும் எங்கள் வீட்டு பீரோவில் அந்த பட்டை பத்திரமாக வைத்திருந்தார்கள்.
 
இப்பொழுது கர்ணனின் கவசத்துக்கு வருவோம். குந்தி மிக சிறிய வயதில் பெற்ற குழந்தை இந்த கர்ணன். அதுவும் வீட்டு பெரியவர்கள் யாருக்கும் தெரியாது. இந்த குழந்தை கூட பட்டு போட்டு பிறந்திருக்க வேண்டும். சிறிய வயது குந்தியால் அதனை சரியாக பிரித்தெடுக்க முடியாமல் குழந்தையின் உடலோடு விட்டிருக்கலாம். அது பின்னர் உடலோடு ஒட்டி கவசமாக மாறியிருக்க வேண்டும் என்பது என்னுடைய அனுமானம். அதுவே பின்னாலில் கர்ணனின் கவசம் ஆகியிருக்க வேண்டும்.
இக்காலத்தில் அப்படி பிறக்கும் குழந்தையை பிரித்தெடுக்காமல் விட்டால் அதற்கும் கவசம் வர வாய்ப்பிருக்கலாம்.
 
குறிப்பு: இப்படி பட்டு போட்டு பிறப்பதற்கான காரணம் மருத்துவரிதியாக எனக்கு தெரியவில்லை. மேலும் அதை அப்படியே விட்டால் உடலோடு சேர்ந்து வளருமா என்றும் தெரியவில்லை. யாரவது மருத்துவரை கேட்டால் தான் தெரியும்.

Sunday, December 15, 2013

பனிக் காலம்

Old picture from Internet

கூட்டை அடைந்த பறவை போல,
வளைக்குள் ஒளிந்த எலியை போல,
நத்தை ஓட்டுக்குள் சுருண்ட வாழ்கை
வரும் மூன்று திங்களுக்கு!

உள்ளொன்று புறமொன்று அணிந்து,
மேலொரு அங்கி அணிந்து,
கழுத்திலே ஸ்கார்ப் அணிந்து,...
காது மறைக்க குல்லாய் அணிந்து,
கைக்கு விதவிதமாய் கையுறை அணிந்து,
காலுக்கு கம்பளி சாக்ஸ் அணிந்து,
அதன் மேலே ஷு அணிந்து,
இத்தனை அணிந்தும்
உள்ளுடல் சுருக்கி
வெளி செல்ல வேண்டும் கிளியே!
பனிக்காலம் வந்ததடி கிளியே!
வாழ்கை சோம்பல் ஆனதடி கிளியே!


                      Winter 2013 Start already!