Wednesday, March 16, 2016

கம்போடியா ‍- 4, அங்கோர்வாட் - கமிர் சாம்ராஜ்யம் (Cambodia, Khmer Kingdom)

  சியம் ரிய‌ப்(Siem Reap), இந்த பெயரை கேள்விபட்டிருக்கிறீர்களா?. அங்கோர் வாட் என்றதும் நமக்கு உடனே கம்போடியா என்பது நினைவுக்கு வந்துவிடும். அங்கோர்வாட் கோவில் இந்த சியம் ரியப் நகரத்தில் தான் இருக்கிறது. இந்த கோவிலுக்கு பெயர்வைக்கும் பொழுது பிற்காலத்தில் இந்த பகுதியே அங்கோர்வாட் என்று தான் அழைக்கப்படபோகிறது என்று கடுகளவு கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். சியம் ரியப் என்பதற்கு அர்த்தம் "defeat of Siem". சியாமீஸ் என்பவர்கள் தாய்லாந்து நாட்டவர்கள். அவர்களுடன் அடிக்கடி யுத்தம் நடந்து கொண்டே இருந்திருக்கிறது. அதனால் இந்த இடத்தை சியம் ரியப் என்று அழைத்திருக்கிறார்கள். அதற்கேற்றார் போல் சியம் ரிய‌ப் ஆனது தற்பொழுதைய தாய்லாந்தின் எல்லை பகுதிக்கு அருகிலேயே இருக்கிறது.

அங்கோர் நகரத்தின்(Angkor Thom) நுளைவுவாயில்


தற்பொழுதைய தலைநகர் நாம்பென்னில் இருந்து சியம் ரியப் சுமார் 320 கிலோ மீட்டர் தூரம். எனக்கு கிடைத்ததோ சனிக்கிழமை ஒரே ஒரு நாள் மட்டுமே. ஞாயிறு காலையில் எனக்கு தைவான் விமான‌த்தை பிடிக்கவேண்டும். முதலில் சாலை வழியாக சென்று வரலாம் என்று நானும், சீதாவும் விசாரிக்க ஆரம்பித்தோம். எல்லோருமே 100 USD கேட்டார்கள். ஆனால் ஒருவழி பயணம் மட்டுமே குறைந்தது ஆறிலிருந்து ஏழு மணி வரை ஆகும் என்றார்கள். வழியில் சாலை ரொம்பவும் மோசமாக இருக்குமாம். காலையில் 11 லிருந்து 12 மணிக்குள் கொண்டுபோய் சேர்த்துவிடுவோம் என்றார்கள். இது சரிப்பட்டுவராது என்பதால் விமானத்தில் போய்வரலாம் என்று விசாரித்தால் ஹோட்டலில் 200USD கேட்டார்கள். சீதாவின் நண்பர் ஒரு டிராவல் ஏஜென்ஸி நடத்துகிறார். அவர் போய்வர மொத்த கட்டணமுமே 90USD க்குள் முடித்துகொடுத்தார். காலை 7:30-க்கு விமானம், 50 நிமிட பயணம்.  இரவு 8 மணிக்கு திரும்புவதற்கு விமானம். அங்கு எல்லா இடங்களையும் சுற்றி காட்டுவதற்கு ஒரு வழிகாட்டி. அங்கோர்வாட்டில் வழிகாட்டுவதற்கு மட்டும் பதிவுசெய்யப்பட்டவர்களின் என்னிக்கை மூவாயிரத்திற்கும் அதிகமாம். வழிகாட்டி செல்வதற்கு கார், வேன், மற்றும் டுக் டுக் என்று பிரித்துவைத்திருக்கிறார்கள். அதற்கேற்ப்ப கட்டணமும் மாறுபடும். அவரவர் வசதிக்கு தகுந்தபடி ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியது தான். என்னுடன் வரப்போகிற வழிகாட்டியின் பெயரை இரண்டு நாட்கள் முன்னரே எனக்கு சொல்லிவிட்டார்கள். பெயர் சம்பத். பெயரை கேட்டவுடனே ஒரு தமிழன் நமக்கு வழிகாட்டியாக வரப்போகிறார் போலும் என்று நினைத்துக்கொண்டேன்.

கம்போடியாவின் ஏரிகளிலே மிகப்பெரியது "டோன்லே சப்" (Tonle Sap)  ஏரி. இதற்கு பெரிய நன்னீர் ஏரி என்று அர்த்தம், சுமாராக 120 கிமீ நீளமுள்ளது. நான் சென்ற விமானம் இந்த ஏரியின் மீது மட்டும் சுமார் 15 நிமிடங்கள் பறந்தது. விமானத்தில் இருந்து பார்தாலே ஏரியை முழுவதுமாக பார்க்கமுடியவில்லை. மேக்காங்க் ஆறு கூட இந்த ஏரியில் வந்து சேர்ந்து பின் வழிந்து செல்கிறது. நிறைய கால்வாய்கள், பாசன வாய்க்கால்கள் என்று கிளை கிளையாக பிரிந்து செல்வதை காணலாம். இந்த ஏரியில் மீன்பிடித்தல், படகு வீடுகள், படகு சந்தைகள் என்று ஒரு சுற்றுலாமையமே இயங்குகிறது என்று வழிகாட்டி சம்பத் சென்னார். சிய‌ம்ரிய‌ப்லிருந்து 50 கிமீ தூரத்தில் இருக்கிறது. முடிந்தவர்கள் சென்று வரலாம்.

டோன்லே சப் ஏரியின் ஒரு பகுதி ‍ விமானத்தில் இருந்து எடுத்தது


விமானம் தரையிரங்கும் சமயத்தில் பின்பக்கமாக இருந்த ஒருவர் என்னை பார்த்து சிரித்தார். தமிழர் மாதிரி இருந்தது. அதனால் அவரிடம் போய் நலம் விசாரித்தேன். அவருடைய பெயர் விசாகன், தொல்லியல் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சியாளர். லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர். அவரை வரவேற்க்க வெளியே ஒரு சென்னை தமிழர் நின்று கொண்டிருந்தார். அவருடைய பெயர் ஞான சேகரன். சியம் ரியப் பகுதியில் சீனு-ஞானம் என்ற  பயனிகள் சேவை நிறுவனம் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு முறை நித்யானந்தா தன்னுடைய சிஸ்யர்களுடன் (சுமார் 300 பேர் என்றார்) வந்தாராம் அதனை ஒழுங்குபடுத்தி கொடுத்தது அவர் தான் என்றும் சொன்னார். முடிந்தால் இரவு சந்திக்கலாம் என்றார்கள். இரவு நான் திரும்புகிறேன் என்று அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன்.

சம்பத் விமான நிலையத்தில் வந்து என்னை வரவேற்றார். அச்சு அசல் கம்போடியன். மருந்துக்கு கூட தமிழ் வாடையில்லை. "உனக்கு தமிழ் தெரியுமா. உன்னுடய பெயர் தமிழ் பெயராக இருக்கிறதே" இப்படித்தான் எங்களுடைய சம்பாசனை ஆரம்பித்தது. இல்லை நான் சுத்தமான கம்போடியன் என்றார். கிமீர் அரசர்களின் மூதாதையர்கள் தமிழர்கள் அல்லாவா என்று என்னுடைய அடுத்த கேள்வியை தொடுத்தேன்.

கம்போடிய வரலாற்று ஆவனங்களின்படி கமிர் வம்சத்தவர்கள் சுத்தமான அக்மார்க் கம்போடியர்களே. அவர்கள் தமிழகத்தில் இருந்தோ சோழ தேசத்தில் இருந்தோ வந்தவர்கள் அல்ல. ஆனால் கமிர் வம்சமானது இந்தியர்கள் போன்ற இந்து மரபை கொண்டது. அவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற‌ இந்து கடவுள்களை வழிபட்டிருக்கிறார்கள். கம்போடியாவில் சில வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் போன்றே உச்சரிக்கபடுகின்றது. ஆனால் அதனை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தமிழிலும் கலந்த்துவிட்ட சமஸ்கிருதம் அல்லது பாலி மொழியாக இருக்கலாம். அவர்கள் அது சம்ஸ்கிருதம் என்று சொல்கிறார்கள். இக்காலத்திலும் இந்து பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுகின்றார்கள். அனால் இந்து வழிபாட்டுமுறை முற்றிலுமாக இல்லை.
நுளைவுவாயில் கோபுர அமைப்பு


கமிர் வம்சமானது 2ஆம் நூற்றாண்டில் இருந்து இருப்பதாக நம்பப்பபடுகிறது. கிட்ட தட்ட ஆதி சோழர்கள் கால கட்டம்தான். ஆனால் அதற்குறிய வரலாற்று ஆவனங்கள் இருப்பது போன்று தெரியவில்லை. அதன் பின்னர் ஓரளவு கமிர் சாம்ராஜ்யம் பெயர் அடிபடுவது 8 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே. இரண்டாம் ஜெயவர்மன் பெயர் தான் ஆரம்பத்தில் இருக்கிறது. கமிர் சாம்ராஜ்யத்தில் ஜெயவர்மன் பெயர் திரும்ப திரும்ப வருகிறது. எட்டாம் ஜெயவர்மன் வரைக்கும் இருக்கிறது. ஆட்சிசெய்த அரசர்களில் மிகவும்  வலிமையான அரசர்கள் என்றால் இரண்டாம் சூர்யவர்மன் மற்றும் 7ஆம் ஜெயவர்மன்.
7ஆம் ஜெயவர்மன்

தற்பொழுதைய வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய சாம்ராஜ்யம் கிமீர். அந்த காலக்கட்டத்தில் சுமார் 25 மாகணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இவைகள் அவ்வப்போது தனிநாடாக அல்லது சுதந்திர நாடாக சண்டை போட்டுக்கொன்டே இருந்திருக்கின்றன. இவைகளை அடக்கி ஆண்டது இரண்டாம் சூர்யவர்மனும் 7ஆம் ஜெயவர்மனும் மட்டுமே. இருவருமே தனித்தனியாக 30 முதல் 40 ஆண்டுகாலம் ஆட்சிசெய்திருக்கிறார்கள். 8ஆம் ஜெயவர்மன் காலத்திலே வழிமை குன்ற தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் உள்நாட்டு கலவரம். இன்னொரு பக்கம் மங்கோலிய சீன அரசாங்கத்தின் மிரட்டல் காரணமாக மங்கோலிய அரசுக்கு வரி(திறை) கட்ட சம்மதிக்கிறார். அதன் பின்னர் முதலில் லாவோஸ் தனி நாடாகுகின்றது. அதன் பின்னர் தற்பொழுதைய வியட்நாமின் ஒரு பகுதி அதாவது வட வியட்நாமின் ஹனாய் மற்றும் அதன் சற்றுப்புற மாகாண‌ங்கள். இதன் தென்பகுதியான வியட்நாமின் ஹோசிமின் பகுதியானது இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே விட்டுக்கொடுக்கப்படுகிறது. கடைசியாக தாய்லாந்த். ஆனாலும் தாய்லாந்தோடு கடைசிவரை சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றனர்.  அந்த சண்டையில் அங்கோர்வாட்டின் பெரும் பகுதி அழிந்துவிடுகிறது. வேறு வழியில்லாமல் 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தற்பொழுதைய தலைநகரான நாம்பென்னிற்கு தலைநகரை மாற்றுகின்றார்கள்.

ஒருங்கினைந்த கமிர் சாம்ராஜ்யம்


அதன் பின்னர் அங்கோர் வாட் பகுதியானது தகுந்த பராமரிப்பின்றி கிடக்கிறது. அதற்காக அங்கே யாருமே இல்லை என்று அர்த்தமில்லை. அங்கு மக்கள் வசிக்கிறார்கள். பராமரிப்பின்மை காரணமாக மேலும் அங்கிருக்கின்ற கோவில்கள் அனைத்தும் மழைக்காடுகளால்(Rain Forest)  சூழப்படுகிறது. வெளித்தொடர்பு முற்றிலும் இல்லாமல் இருக்கின்றது. ஒருகட்டத்தில் கம்போடியா பிரன்ஸின் ஆதிக்கத்தில் காலனிநாடாக மாறுகிறது. 1860 ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த ஹென்றி முஹாட் அங்கர் வாட் பகுதியை சுற்றி பார்க்க வருகிறார். அப்பொழுது அங்கோர் கோவிலின் பிரமாண்டத்தை பார்த்து அதனை ஓவியமாக வரைகிறார். (அவர் வரைந்த ஓவியங்கள் இனையதளத்தில் இருக்கிறது). அதனை வெளியிடும் போழுது மீண்டும் அங்கோர் வாட் மீது உலகத்தின் பார்வை பதிகிறது.
 
ஹென்றி முஹாட் வரைந்த ஓவியம் - அங்கோர்வாட்டின் முகப்பு
பொதுவாக இனையதளங்களில் காட்டிற்குள் இருந்த அங்கோர்வாட் கோவிலை ஹென்றி முஹாட் கண்டுபிடித்தார் என்றுதான் எல்லோரும் பதிவுசெய்கிறார்கள். ஆனால் அங்கோர்வாட் பகுதியில் அங்குள்ள ஆதி கமிர் பழங்குடியின மக்கள் வசித்துவந்திருக்கிறார்கள். அவர்களுடைய வெளித்தொடர்பும் குறைவானதே. அதனால் அங்கோர்வாட் பற்றிய செய்தி பரவவில்லை. வெளிநாட்டவர் ஒருவர் அதனை ஓவியமாக வரைந்து பரவலாக்கியிருக்கிறார்.  அதன்பின்னரே நிறைய அன்னிய மக்கள் அங்கு சென்றுவர தொடங்கியிருக்கிறார்கள். தற்பொழுது பல நாட்டு அரசாங்கங்களும் பணவுதவி செய்து அங்கிருக்கும் கோவில்கள் அனைத்தையும் புனர் நிர்மானம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

கமிர் அரச பரம்பரையில் ஒரு பெயர் ராஜேந்திரவர்மன் என்று வருகிறது. 10ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். அவர் பற்றி மேலதிக தகவல் ஏதும் இல்லை என்று வழிகாட்டி சொல்லிவிட்டார். அதனால் அவர் தமிழரா அல்லது கம்போடியரா என்று தெரியவில்லை. கமிர் அரசபரம்பரையிலே நிறைய தாயாதி, பங்காளி சண்டைகள் நடந்திருக்கிறது. பெண்வழி அரச உரிமை இருந்திருக்கிறது. அதிலும் அதன் சேனாதிபதிகள் அரசர்களை கொன்று அரசாட்சி செய்திருக்கிறார்கள். அவர்களும் தங்களை கமிர் அரச பரம்பரை என்று தான் சொல்லியிருக்கிறார்கள். அதனால் சில அரசர்களின் பிறப்பு பற்றிய தகவல்கள் சரியாக கிடைக்கவில்லை. இப்படி நடந்த தாயாதி சண்டைகளில் சில நேரங்களில் தமிழக மன்னர்கள் தலையிட்டு சமாதனம் செய்திருக்கிறார்கள் அல்லது ஒருவருக்கு சாதகமாகவும் நடந்திருக்கிறார்கள்.


மேலே பதிவுசெய்தது அனைத்தும் என்னுடைய வழிகாட்டி என்னுடன் பகிர்ந்துகொண்டவை. அதாகப்பட்டதாவது கம்போடிய அரசாங்கம் அங்கோர்வாட் வழிகாட்டிகளுக்கு கற்றுக்கொடுத்த கமிர் வரலாறு.

புகைப்பட உதவி :  கூகுள்

Wednesday, March 9, 2016

கம்போடியா -3, நாம் பென் (Cambodia - Phnom Penh)

   கம்போடியாவின் மிக முக்கியமான நீராதாரங்களில் மேக்காங் ஆறும் ஒன்று. உலகின் மிக நீளமான ஆறுகளில் 12 ஆம் இடத்தில் இருக்கிறது, ஆசியாவில் ஏழாம் இடத்தில் உள்ளது. இதனுடைய தொடக்கம் திபெத்தியன் பீடபூமி. சீனாவில் இருந்து புறப்பட்டு மியான்மர்(பர்மா), லாவோஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளின் வழியாக ஓடி கம்போடியாவினுல் நுளைகிறது. கம்போடியாவின் குறுக்காக ஒடி வியட்நாமின் கோசிமின் பகுதி வழியாக சுமாராக 4350 கிலோமீட்டர் தூரம் கடந்து சீனக்கடலில் கலக்குறது. இதனுடைய துனை ஆறுகள் எல்லாவற்றிலும் இருந்து வந்து சேருகின்ற நீரினால் எப்பொழுதும் நிறைந்து ஓடுகின்றது. இந்த ஆற்றில் சிறிய அளவினால் ஆன சரக்கு கப்பல்கள் செல்கின்றது. லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கம்போடியா சேர்ந்து கூட்டமைப்பு ஏற்படுத்தி இதனை செய்கிறார்கள். இரவில் கூட இந்த ஆற்றின் வழியாக கப்பல்கள் செல்வதை பார்க்க முடிகிறது.
மேக்காங் ஆற்றில் செல்லும் சரக்கு கப்பல்

   கம்போடிய மன்னரின் அரண்மனை மேக்காங் ஆற்றின் கரையோரமாக இருக்கிறது. தலைநகர் நாம்பென் அதனை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையை சுற்றிலும் கேளிக்கை விடுதிகள் இரவு விடுதிகள் மற்றும் உணவகங்கள் என்று ஒரு சுற்றுலா மையம் போல் வைத்திருக்கிறார்கள். அரண்மனை காலை 8 மணிக்கு திறந்து மாலை 5 மணிக்கு மூடிவிடுகிறார்கள். அரண்மனையில் இன்னும் மன்னர் பரம்பரையினர் வசிக்கின்றனர். உள்ளே சென்று அரண்மனையின் சில பகுதிகளை பார்வையிடலாம். நுளைவுக்கட்டனம் 3USD புகைப்படக்கருவியை கொண்டு செல்ல 2USD. நேரம் ஒத்துழைக்காமையால் உள்ளே சென்று பார்க்கமுடியவில்லை. நம் ஊரினை போன்றே அரண்மனைக்கு முன்னர்  மன்னரின் நிழற்படத்தினை கட்டவுட் போன்று  பிரமாண்டமாக வைத்து மின் விளக்குகளால் அலங்கரித்திரிக்கிறார்கள். அரண்மனை முகப்பு வாயில் கோபுரத்தில் தற்பொழுதைய ராணியின் படம் அலங்கரிக்கிறது. அரண்மணை பக்கத்திலே அருங்காட்சியகமும் இருக்கிறது.

மன்னரின் நிழற்படம் அலங்கார வளைவு
அரண்மனை முகப்பு வாயில்
  கம்போடியாவில் நிறைய பனைமரம் இருக்கிறது. அரண்மனை வளாகத்திற்குள்ளும் சில மரங்கள் நிற்கின்றன. நம் ஊராக இருந்தால் வெட்டி போட்டிருப்பார்கள். ஆனால் அரண்மனையில் உள்ள மரத்தின் மத்திய பகுதியில் வலை போன்ற ஒரு இரும்பு அமைப்பை வட்டமாக மாட்டிவைத்திருக்கிறார்கள். பனை மரத்தில் இருந்து எது விழுந்தாலும் அந்த வலையில் மட்டுமே விழும். தகுந்த பாதுகாப்பு செய்து பனை மரத்தை வெட்டாமல் வைத்திருக்கிறார்கள். வாழ்க கம்போடியா...!

அரண்மனை வளாக பனைமரமும் அதில் உள்ள இரும்பு வலை அமைப்பும்

  ஆற்றங்கரையிலே சிறிது தூரம் நடந்துவந்தால் இரண்டு பேர் குதிரையில் செல்வது போன்ற சிலை இருக்கிறது(Techo Meas and Techo Yot Statue). இவர்கள் இருவரும் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டின் சிறந்த கம்போடிய தளபதிகள். அவர்களின் நினைவாக கம்போடிய அரசு இந்த சிலையை வடிவமைத்திருக்கிறார்கள். அதை தாண்டி சிறிது தூரம் சென்றால் உன்னலும் கோவில்(WAT unnalom) ப‌கோடா இருக்கிறது. எல்லா கோவிலும் காலை 8 முதல் மாலை 5 வரைக்குமே திறந்திருக்கின்றன.
Techo Meas and Techo Yot Statue
 
WAT unnalom
   அப்படியே ஆற்றங்கரையை விட்டு சிறிது உட்பக்கமாக சென்றால் இரவு சந்தை இருக்கிறது. கம்போடியாவில் இரவு சந்தை மாலை 6 மணிக்கு கூடி இரவு 10 மணியோடு முடிகிறது. நாங்கள் செல்லும் பொழுது நடுவில் இருந்த மேடையில் சந்தைக்கு வந்திருந்த கம்போடியன் ஒருவர் பாடிகொண்டிருந்தார். யார் வேண்டும் என்றாலும் போய் பாடலாம். இங்குள்ள சந்தையில் துணிகள் தான் அதிகம் இருக்கிறது.
இரவு சந்தை

தாய்சீ ஸ்வார்ட் பயிற்சி செய்யும் வெளிநாட்டவர் ‍- மேக்காங் ஆற்றங்கரை
     கம்போடியாவில் இருந்த வரையிலும் உணவுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அரண்மனையை சுற்றிலும் ஐந்துக்கும் அதிகமான இந்திய உணவகங்கள் இருக்கிறது. அனைத்து உணவகங்களும் பொதுவான ஒரு வலைதளத்தில் தங்களுடைய உணவு வகைகளை விலையோடு பட்டியலிட்டிருக்கிறார்கள். அதனை பார்த்து தொலைபேசி வழியாக நமக்கு தேவையானவற்றை பட்டியலிட்டால் போதும் அடுத்த அரை மணிக்குள் நம்மை தேடி வந்து கொடுக்கிறர்கள். குறைந்த பட்சமாக 5USD-க்கு ஆர்டர் இருக்க வேண்டும். நான் எப்பொழுதும் "வணக்கம் இந்தியா" என்ற உணவகத்திலே ஆர்டர் செய்தேன். அதன் முதலாளி ஒரு மலையாளி, தமிழும் பேசுவார். அதனால் என் தேவைகேற்ற மாதிரி சுவையில் மாற்றம் செய்து கொடுத்தார்.
நாம்பென் அருங்காட்சியகம்


  தலைநகர் நாம்பென்னில் ஒரு இடம் இருக்கிறது. அது ஒரு கொலைக்களம். அங்கு போனால் நிறைய மண்டை ஓட்டை பார்க்காலாம். சுமார் 2 மில்லியன் (20 லட்சம்) மக்களை கொலைசெய்த புதைத்த இடம். இப்பொழுது காட்சியகமாக மாற்றிவைத்திருக்கிறார்கள். இதை பற்றிய கதையை நண்பர் சீதா சொன்னார். கம்போடியாவில் ஏழை குடும்பத்தில் பிறந்த "போல் பாட்" என்பவர் ஃப்ரான்சு நாட்டிற்கு படிக்க செல்கிறார். அங்கு கம்யூனிசத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறார்கள். படிப்பு முடிந்து நாட்டிற்கு திரும்பிய போல் பாட் அரசியலில் ஈடுபடுக்றார். ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை கடத்தி கொலைசெய்கிறார்கள். சிறிய அளவில் ஆரம்பித்த இந்த நிலை நாளைடைவில் வளர்ந்து தனிப்பட்ட விரோதத்தில் இருந்தவர்களையும் கடத்தி கொலைசெய்கிறார்கள். மேலும் பக்கத்து நாட்டில் இருந்து வந்து கம்போடியாவில் இருந்தவர்களையும் குறிப்பாக வியட்நாம், லாவோஸ், சீன மக்களை இனவழிப்பு செய்திருக்கிறார்கள். இந்த விளையாட்டு சுமார் 5 ஆண்டுகாலம் நடந்திருக்கிறது. மன்னரின் நண்பரும் நாட்டின் தளபதியுமாக இருந்தவர் இந்த கலவரத்தை திறம்பட அடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார். பின்னர் அவரையே பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அப்படி கொலை செய்து மொத்தமாக புதைத்த இடத்தை தற்பொழுது அகழாராச்சி செய்து மண்டையோடுகளை எடுத்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். வலைதளத்தில் "killing fields cambodia" என்று தட்டச்சு செய்து தேடினால் நிறைய படங்கள் வருகிறது.

   அந்த கொலைகளத்தை போய் பார்க்கலாம் வாங்க என்று இளங்கோ அழைத்தார். ஊருக்கு வெளியே இருக்குற சுடுகாட்டு பக்கம் போகனுமின்னாலே ஒரு தடவைக்கு பத்துதடவ யோசிப்பேன். 20 லட்சம் பேரை கதற கதற கொன்று புதைத்த இடத்துக்கு போறதுக்கு எனக்கு என்ன தலையெழுத்தா! முடியாதுன்னு சொல்லிட்டேன்.


என்னோட டார்கெட்ல இருந்தது ஆங்கர் வாட் மட்டுமே.

Wednesday, February 17, 2016

கம்போடியா -2, நாம் பென் (Cambodia - Phnom Penh)


   
கம்போடியாவின் தேசிய விலங்கு
அடுத்த நாள் காலை 6 மணிக்கு எழுந்து பக்கத்தில் இருக்கும் பகோடாவை சுற்றிப்பார்த்தேன். முதல் பாகத்தில் சொன்னது போல் இது ஒரு செயற்கை குன்று. நான்கு பக்கமும் மேலே செல்வதற்கு பாதை இருக்கிறது. எந்த பக்கம் முன் வாசல் என்று தெரியவில்லை. சிறிய சங்கிலி கொண்டு சுற்றி பாதுகாப்பு செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் சிலர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை தாண்டி கொஞ்ச தூரம் சென்றதும் படிக்கட்டு தெரிந்தது. படிக்கட்டின் முகப்பில் ஏழு தலையை விரித்துக்கொண்டு இரண்டு பக்கமும் நாகத்தின் சிலை இருந்தது. இதனை வாசுகி என்கிறார்கள். அது போல் சில இடங்களில் ஆதிசேஷன் என்கிறார்கள். கம்போடியாவில் நிறைய இடங்களில் வளாகங்களை சுற்றிலும் இதேபோன்ற பாம்பு சிலைகளை காவல் தெய்வமாக வைத்திருக்கிறார்கள்.  ஒரு சில புகைப்படம் எடுத்ததும் மேலே செல்வதற்கு முதல் படியில் காலை வைத்தேன். யாரோ கூப்பிடுவது போன்று இருந்தது. பகோடாவின் பாதுகாவலர் ஒருவர் எங்கிருந்தோ என்னை நோக்கிவந்து ஒரு டாலர் பணம் கேட்டார்.

வாட்நாம்
முந்தைய நாள் கேள்விபட்டதில் கோவில் கூட 8 மணிக்கு திறந்து 5 மணிக்கு மூடிவிடுவார்கள் என்பது தான். ஒரு மூடிய கோவிலை போய் பார்ப்பதற்கு 1 டாலர் பணம் கேட்டார். எனக்கு முன்னர் உள்ளூர் தம்பதி ஒன்று மேலே ஏறிசென்றனர். அவர்களிடன் எதுவும் கேட்கவில்லை. கிட்டதட்ட நான் மேலே ஏறுவதற்கு காத்திருந்து வந்தது போன்று இருந்தது. ஒரு டாலர் பணம் கொடுத்துவிட்டு மேலே சென்றேன்.

மேலே ஏறியதும் கண்களில் முதலில் தட்டுப்பட்டது கொடி மரம். நம் ஊரில் கோவில்களில் இருப்பது போன்ற கொடிமரம், அதன் மீது சேவல் போன்ற ஒரு உலோக அமைப்பு இருந்தது. மஞ்சள் நிற கொடி ஒன்று தொங்கி கொண்டிருன்டிருந்தது. கோவில் சிமெண்டால் கட்டியது போன்று இருந்தது. எங்கு பார்த்தாலும் சிவப்பு, மஞ்சல் நிறமாக இருந்ததால் அனுமானிக்க முடியவில்லை. கூரையானது ஓடு வேய்ந்தது. சுவற்றில் உருவம் செய்து கூரையை தாங்கி பிடிப்பது போன்று வடிவமைத்திருந்தார்கள். நம் ஊரில் யட்சிகளும் அரக்கர்களும் இரு கை கொண்டு எதையாவது தாங்கு வது போன்று ஒரு அமைப்பு.
கொடிமரம்

யாளி போன்ற அமைப்பு


கொடிமரத்துக்கு பக்கத்திலே ஒரு சிறிய ஓட்டு கூரைக்குள் மிகப்பெரிய மேளம் வைத்திருக்கிறார்கள். சீன‌, தைவான் நாடுகளில் இப்படி பட்ட பெரிய மேளங்களை வைத்து அதனை அடிப்பதற்காக சங்கிலியில் ஒரு கட்டையை கட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த சங்கிலியை இழுத்து விட்டால் கட்டை போய் மேளத்தின் தோல்பரப்பை அடித்துவிட்டு வரும். ஆனால் இங்கு அது போன்ற‌ எந்த அமைப்பும் இல்லை.
பகோடா( கோபுரம்)

பகோடா ‍(கோபுரம்)

ஒருவர் சிறிய பறவைகள் நிரம்பிய கூண்டை எடுத்து மேலே வந்தார். அதனை பறக்க விடுகிறேன், படம் எடுக்கிறாயா என்றார். வேண்டாம் என்று கோவிலின் பின்புறம் சென்றேன். வெள்ளை நிறமான வானுயர்ந்த‌ பகோடா ஒன்று கோவிலுக்கு பின்புறம் இருந்தது. அது ஒரு உள்ளீடற்ற கோபுரம். அதாவது அதனுல் செல்வதற்கு எந்த பாதையும் கிடையாது. ம்ற்றிலும் சிமெண்ட் கலவையை ஊற்றி செய்ததாக இருக்கலாம். எந்த வித வர்ணமும் பூசாமல் சிமெண்ட் நிறத்திலே வைத்திருக்கிறார்கள். அப்படியே சுற்றி முன்பும் வரவும் ஒரு பெரியவர் கோவில் கதவை திறக்கவும் சரியாக இருந்தது. என்னை உள்ளே வா என்று அழைத்தார். பெரிய அரங்கம் அதில் படுத்த வண்ணம் இரண்டு சிலைகளும் உட்கார்ந்தபடி இரு சிலைகளூம் இருந்தன. இந்த நான்குசிலைகளும் தான் 'பென்' பாட்டி கண்டெடுத்தவைகளாக இருக்க வேண்டும். பெரிய பெரிய மெழுகுவர்தியை ஏற்றி வைத்திருந்தார்கள். உள்சுவற்றில் சுவரோவியம் நிறைய இருந்தது. அதில் அந்த கால தண்டனை முறைகள் நிறைய இருந்தன. நம் ஊரில் சூடம் ஏற்றுவது போல் இங்கு எல்லாம் ஊதுவத்தி கொளுத்துவது வழக்கம். ஒரு ஊதுவத்தி கொளுத்தி வைத்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினேன்.


வாட்நாம் சிலைகள்


மெழுகுவர்த்தி
பொதுவாகவே கம்போடியாவில் போக்குவரத்துக்கு அதிகம் நம்பியிருப்பது டுக் டுக் தான். சாரட் வண்டி போன்ற ஒரு அமைப்பு, அதன் ஒரு முனையில் ஒரு கொக்கி. குதிரைக்கு பதிலாக மோட்டார் வாகனம். மோட்டார் வாகணத்தில் ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங். தேவைப்படும் பொழுது சாரட் வண்டியை மாட்டவும், கழட்டிவிடவும்.இதுதான் டுக் டுக். நான்கு முதல் ஆறு நபர்கள் அமரலாம். அதிகபட்சமாக 40 கிமீட்டர் வேகத்தில் செல்கிறார்கள். ஏர்போர்ட்டுக்கு செல்ல மகிழுந்தில் 12 டாலர். டுக் டுக்கில் செல்ல 7 டாலர் வசூலிக்கிறார்கள். இன்னொரு பயணவாகணம் இருக்கிறது. மோட்டார் வாகனம். மோட்டார் வாகனத்தின் சொந்தகாரர் ஓட்டிவருவார். நாம் பின்னாடி உட்கார்ந்துகொள்ளலாம். ஒரே ஒரு நபர் எங்காவது செல்லவேண்டும் என்றால் மோட்டார் வாகனம் தான் பெஸ்ட். செலவும் குறைச்சல். ஏர்போர்ட் செல்ல 5 டாலர் தான் வசூலிக்கிறார்கள். நாம்பென்னில் இருந்த 5 நாட்களிலும் பேருந்துகளை பார்க்கவே முடியவில்லை. ஆனால் ஒரு சில சாலைகளில் சிற்றுந்துகள்(மினி பஸ்) செல்கின்றது.

டுக் ‍- டுக்


கம்போடியாவில் மிகவும் ஆச்சரியப்பட்ட விசயம் மிகப்பெரிய சாலையில் கூட போக்குபோக்குவரத்து சிக்னல் விளக்குகள் இல்லை. மோட்டார் வாகனமாகட்டும், டுக் டுக் ஆகட்டும் அல்லது மகிழுந்தாகட்டம் ஒரு வித நளினத்துடன் வளைந்து நெளிந்து சாலைகளை கடந்து, அல்லது அடுத்த சாலைக்குள் செல்கிறார்கள். எவரும் அடுதவர் வண்டி தாண்டிசெல்வதற்காக நிறுத்துவதில்லை. ஒலி எழுப்புவதில்லை. அதற்கு மிகமுக்கிய காரணம் வண்டியின் வேகம் தான் என்று நினைக்கிறேன். 30 லிருந்து 40 கிமீ வேகத்திலே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. அதனால் அவர்களுக்கு அடுத்த வாகணத்தின் வேகம் திசை எல்லாம் ரொம்பவும் எளிமையாக கணிக்க முடிகிறது என்று நினைக்கிறேன்.



இரவு 9 மணி அளவில் மேக்காங் ஆற்றின் கரையோரம் ஒரு நடைபயனம் போய்விட்டு வரலாம் என்று நானும் இளங்கோவும் சென்றோம். இளங்கோ எங்களுடைய வியட்நாம் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தார். ஹோட்டலை விட்டு வெளியே வந்து வாட்நாமை சுற்றி நடந்தோம். சிறிது தூரம் நடந்ததும் "ஸ்லீப் வித் யூ" என்று ஒரு வரி காதில் விழுந்தது. திரும்பி பார்த்தால் இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். பதில் பேசாமல் நடந்தோம். இளங்கோ கொஞ்சம் முன்னாடி போனதும் கெக்கே பிக்கே என்று சிரித்தார். அவரிடம் சிரிக்காதீர்கள், நம் சிரிப்பு சத்தம் அவர்கள் காதில் விழுந்தால் பிரச்சனையாகிவிடும் என்று சொன்னேன். அவர் அதனை காதில் வாங்கியது போல் தெரியவில்லை. மேக்காங்க் ஆற்றின் கரையோரம் பெரிய நடைபாதை கட்டிவைத்திருக்கிறார்கள். நடைபாதைக்கு ஒரு பக்கம் மேக்காங் ஆறு ஓடுகிறது. அடுத்த பக்கம் இரவு கேளிக்கை விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் இருக்கின்றன. சிறிது தள்ளி அரண்மனை உள்ளது. ஆனாலும் வழி நெடுகிலும் பெண்கள் நின்று கொண்டு தான் இருக்கிறார்கள். திரும்பி வரும் பொழுது பாதை மாறி இரவு கேளிக்கை விடுதிகள் இருக்கும் தெருவழியாக வந்தோம். மேற்குலக  மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கேளிக்கை விடுதிகள் அனைத்தும் அவர்களால் நிறைந்து வழிகின்றது. மேலும் தெருவிலே பந்தல் போட்டு சேர் மற்றும் மைக் செட் வைத்து மதுபானம் அருந்திக்கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் மேற்குலக மக்களே அதிகம் இருக்கிறார்கள். இத்தனைக்கும் 'நாம் பென்' சுற்றுலா தளம் கூட கிடையாது. அங்கு அதிக பட்சம் சுற்றுலா தளமாக அரண்மனை, வாட்நம், மியூசியம், ஒரு கொலைக்களம் அவ்வளவுதான்.

அடுத்தநாள் சீதாவிடம் இங்கு தொழிலாலர்களூக்கு சம்பளம் எவ்வளவு என்று கேட்டேன். குறைந்தபட்சம் நூறு அதிகபட்சம் நூற்றைம்பது அமெரிக்க டாலர் என்றார். ஒரு மாதத்திற்கு சொல்லுங்கள் என்றேன். அவர் நானும் ஒரு மாதத்திற்கான சம்பளம் தான் சொல்கிறேன். இங்கு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு நபருக்கு குறைந்த பட்சம் 100 அதிக பட்சம் 150 டாலர் தான் சம்பளம் என்றார். கடைசி நாள் ஒரு இந்திய உணவகத்துக்கு நேரில் சென்றேன். அவரும்  100 முதல் 125 டாலர் தான் சம்பளம் என்றார். இந்த ஊரில் அனைத்து விலைகளுமே டாலரில் தான் சொல்கிறார்கள்சில ஆசிய நாடுகள் போன்று இங்கும் வெளியே உணவு உண்ணும் முறை அதிகமாக தெரிகிறது. நூறு டாலர் எப்படி ஒருவருக்கு போதுமானதாக இருக்கும். மீதி தேவைகளுக்கு என்ன செய்வார்கள்வருமையின் காரணமாகவே பெண்கள் இரவு நேரத்தில் இப்படி வரிசையில் நிற்கிறார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டேன்..


மேலும் இங்கு ராபெரி கூட அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது. ஆங்கர் வாட் செல்லும் போது விமான நிலையம் செல்ல டுக் டுக் வாடகைக்கு எடுத்தேன். வண்டியில் ஏறியதும் முதுகு பையையும் என்னுடைய கேமரா பையையும் கழட்டி வண்டியில் வைத்தேன். வண்டியோட்டி என்னிடம் வந்து பையை திரும்ப மாட்டிக்கொள்ள சொன்னான். மேலும் கேமரா பையை கையில் கட்டியாக பிடித்துக்கொள் அல்லது யாராவது எடுத்துவிடுவார்கள் என்றான். அப்படி என்றால் ஓடுகின்ற வண்டியிலிருந்தே திருடும் வழக்கம் அங்கும் உள்ளது என்று தான் நினைக்கிறேன். இதற்கு கூட அவர்களுடைய குறைந்த வருமானமே காரணமாக‌ இருக்கலாம். ஆனால் 'நாம்பென்'னை விட ஆங்கர் வாட் அதிக பாதுகாப்பாக இருக்கும் என்று சீதா சொன்னார். அவர்களுடைய மிகப்பெரிய சுற்றுலா தளம் ஆங்கர் வாட் என்பதனால் கூட அது பாதுகாப்பானதாக இருக்கலாம்.